ரொம்பவே குறைய போகும் டோல் கட்டணம்! அதென்ன ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக் கட்டணம்! எப்படி செயல்படும்?
டெல்லி: மத்திய அரசு புதிதாக முன்மொழிந்துள்ள ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூலிப்பு முறை எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம்.
வானக ஓட்டிகளுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் மத்திய அரசு புதிய டோல் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முறை மூலம் டோல் கட்டணம் மிகப் பெரிய அளவில் குறைய உள்ளது.
ஏற்கனவே, டோல்கேட்களில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க மத்திய அரசு ஃபாஸ்ட் டேக் என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்து இருந்தது.

மத்திய அரசு
அந்த திட்டத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. டோல்கேட்களை கடக்கும் போதும், நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகத் தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இது டோல்கேட்களில் வாகன நெரிசலைக் குறிப்பிட்ட அளவு குறைத்தது. நாட்டில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் ஏற்கனவே இந்த ஃபாஸ்ட்டேக் திட்டத்திற்கு மாறிவிட்டன.

புதிய திட்டம்
இதற்கிடையே மத்திய அரசு புதிய டோல் கட்டணம் முறை தொடர்பாக ஆய்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், மத்திய போக்குவரத்துத் துறை நிதின் கட்கரி இந்த புதிய டோல் முறை குறித்துப் பேசி இருந்தார். அதாவது இன்னும் ஓராண்டிற்குள் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் எனக் கூறி இருந்தார். அதற்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்பையிலான டோல் கட்டண வசூலிப்பு முறையைக் கொண்டு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகள் ஹேப்பி
இந்த முறை மட்டும் வெற்றிகரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், டோல் கட்டணம் வசூலிப்பதில் இது மாபெரும் புரட்சியாகவே இருக்கும். தற்போது வெளியாகி உள்ள தகவலின் அடிப்படையில் இது வாகன ஓட்டிகளுக்கு நல்லதொரு திட்டமாகவே உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் செலுத்தும் டோல் கட்டணத்தில் அளவு பெருவாரியாகக் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல சுங்கச்சாவடியில் நிற்கவே தேவையில்லை என்ற நிலையும் உருவாகும்.

பிரச்சினை இல்லை
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டங்கள் எப்படி செயல்படும்? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம். முதலில் ஜெர்மனி நாட்டில்தான் இந்த திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. ஜெர்மனியில் கிட்டதட்ட அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் முறை இருப்பதால், அதன் மூலமே கட்டணம் வசூலிக்கப்படும். தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை

எப்படிச் செயல்படும்
அதாவது அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். பின்னர் வாகனம் சுங்க சாலைக்குள் நுழையும்போது, அதற்கான கணக்கு தொடங்கும். வண்டி எப்போது சுங்க கட்டணம் இல்லாத சாலைக்கு மாறுகிறதோ, அப்போது கணக்கீடு நிறுத்தப்படும். வாகனம் எத்தனை தூரம் பயணித்ததோ, அதற்கான கட்டணம் மட்டும் கணக்கிடப்பட்டு தானியங்கி முறையில் டோல் கட்டணம் கழிக்கப்படும்.

கட்டணம் குறையும்
தற்போது இருக்கும் டோல்கேட் முறையில், குறைந்த தூரம் மட்டுமே டோல் சாலைகளில் பயணித்தாலும் கூட முழு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேநேரம் இந்த ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டால், நாம் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ, அந்த அளவுக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலித்தால் போதும்! இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்குப் பெரியளவில் டோல் கட்டணம் குறையும்.

எப்போது
இந்தத் திட்டம் இப்போது சோதனை முறையில் சுமார் 1.37 லட்சம் வாகனங்களில் டெஸ்ட் செய்யப்படுகிறது. இதைத் தேசிய அளவில் அறிமுகப்படுத்த சில ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தவே சில ஆண்டுகள் ஆனது. எனவே, இந்த ஜிபிஎஸ் முறையிலான கட்டண வசூலிப்பும் முழுமையாக அமல்படுத்த சில ஆண்டுகளாவது ஆகும்.












Click it and Unblock the Notifications