"அதென்ன 2.35 மணி.." சந்திரயான்-3 நேரம்.. காரணம் பஞ்சாங்கமா? உண்மை காரணத்தை சொன்ன மயில்சாமி அண்ணாதுரை
டெல்லி: சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ள நிலையில், இது விண்ணில் பாயும் நேரம் இறுதி செய்யப்படும் செயல்முறை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி ஆய்வில் வேற லெவலில் பாய்ச்சலை அடைந்து வருகிறது. இந்தியா அனுப்பி சந்திரயான், மங்கல்யான் என ஒவ்வொரு சாட்டிலைடும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதற்கிடையே இஸ்ரோ இன்று சந்திரயான் 3 சாட்டிலைடை விண்ணில் செலுத்த உள்ளது. இது சரியாக இன்று மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்டவுன் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
நேரம்: சந்திரயான் என்று இல்லை சாட்டிலைட்கள் விண்ணில் செலுத்தப்படும் நேரம் குறித்து சில காலமாகப் பலரும் பலவித கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். அதாவது காலை 6.22 (சந்திரயான் 1), மதியம் 2.46 (சந்திரயான் 2) இப்போது சந்திரயான் 3 சாட்டிலைட் மதியம் 2.35 மணிக்கு என்று ஏன் இந்த நேரத்தில் விண்ணுக்கு அனுப்புகிறார். 2.30 மணிக்கோ அல்லது 3 மணிக்கோ அனுப்பலாமா எனப் பலரும் கேள்வி எழுப்பினர். சிலர் நல்ல நேரம் பார்த்தும், பஞ்சாங்கம் பார்த்தும் நேரம் இறுதி செய்யப்படுவதாக இறுதி செய்யப்படுவதாக எல்லாம் கூறினர்.
இருப்பினும், இதற்கான உண்மை காரணத்தைச் சந்திரயான் மற்றும் மங்கல்யான் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை தனது பழைய நேர்காணல் ஒன்றில் விளக்கியிருந்தார். அது தொடர்பாகப் பார்க்கலாம். அதில் மயில்சாமி அண்ணாதுரை, "விண்வெளி ஆய்வாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் இறைவன் மீது நம்பிக்கை இருக்கலாம். ஆனால், நாங்கள் குறிக்கும் இந்த நேரத்திற்கும் பஞ்சாங்கம் உள்ளிட்ட விஷயங்களுக்கும் தொடர்பு இல்லை.
நிலவு பூமியை லட்சம் கிமீ வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நமது பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. இங்கிருந்து ஒரு விண்கலம் அனுப்பப்பட்டால் அது நிலவுக்குச் சென்றடைய 6, 7 நாட்கள் ஆகும். இத்தனை நாட்கள் பயணித்த பின்னரே சந்திரயான் நிலவைச் சென்றடையும். நமது சந்திரயான் இத்தனை நாட்கள் பயணித்துச் சென்றடையும் போது அந்த இடத்தில் நிலவு இருக்க வேண்டும்.

என்ன காரணம்: ஆனால், புறப்படும் சமயத்தில் அங்கே இருக்காது. வேறு இடத்தில் இருக்கும். எனவே, நிலவின் வேகம், பூமியின் வேகம் என அனைத்தையும் கணக்கிட்டே நேரத்தை இறுதி செய்கிறோம். மேலும், இப்போது நாம் அதிகப்படியான சாட்டிலைட்களை அனுப்புவதால் விண்வெளியில் பல கழிவுகள் இருக்கின்றன. பொதுவாக அவை கூட்டம் கூட்டமாகவே சுற்றி வரும். அந்த கழிவு கூட்டத்தில் இருந்து தள்ளிச் செல்லும் வகையிலும் நமது திட்டம் இருக்க வேண்டும்.
இப்படி ஒரு நேரத்தை முடிவு செய்யப் பல காரணங்கள் இருக்கிறது. ஆனால், இது எல்லாமே அறிவியல் பூர்வமானதாகவே இருக்கும் எனவே, ஒரு 10 நிமிடம் முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ நாம் அனுப்பினால் கூட அது சென்றடையும் போது அங்கே நிலவு இருக்காது. எனவே, துல்லியமாக அந்த நேரத்தில் கிளம்பியே ஆக வேண்டும். இதற்கும் பஞ்சாங்கத்திற்கும் எல்லாம் எந்தவொரு தொடர்பும் இல்லை.
தனிப்பட்ட நம்பிக்கைகள்: இஸ்ரோவிலும் தனிப்பட்ட முறையில் பலருக்கும் நல்ல நேரம், கெட்ட நேரத்தில் எல்லாம் நம்பிக்கை இருந்தது. இதனால் அங்கே செவ்வாய்க்கிழமை புதிதாக எதையும் செய்யக் கூடாது என்றெல்லாம் இருந்தார்கள். நான் சந்திரயான், மங்கல்யான் திட்ட இயக்குநராக இருந்த போது தான் அனைத்து நாட்களும் எல்லா வேலையையும் செய்யும் முறையைக் கொண்டு வந்தேன்..
எங்களது சந்திரயான், மங்கல்யான் என இரு திட்டங்களும் வெற்றி பெற்ற நிலையில், இப்போது செவ்வாய்க்கிழமையில் புதிது எதுவும் செய்யக் கூடாது என்று இருந்தது மாறி வருகிறது" என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் சாட்டிலைட் ஏவப்படும் நேரம் இறுதி செய்யப்படுவதற்கும் பஞ்சாங்கத்திற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications