வங்கி கணக்கில் உரிமை கோரப்படாத பணம் இருக்கா? ஈசியா தெரிந்து கொள்ளலாம்.. இதோ ரூல்ஸ்!
சென்னை: வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.42 ஆயிரம் கோடி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமை கோரப்படாத தொகை என்றால் என்ன? அதனை பெற வேண்டும் என்றால் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எபதை இங்கே காணலாம்.
நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் வரை அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத பணம் ரூ. 42,270 கோடி இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் 36,185 கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளிலும் 6,087 கோடி ரூபாய் தனியார் வங்கிகளிலும் உரிமை கோரப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருந்த 32934 கோடி ரூபாயை விட 28 சதவீதம் அதிகம் ஆகும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

சரி உரிமை கோரப்படாத தொகை என்றால் என்ன? அதனை பெற வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும், அந்த பணத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம். வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்கும் நாம் சில காரணங்களுக்காக நம்மால் அதனை மெய்டெய்ன் செய்ய முடியாமல் போகலாம்.
உரிமை கோரப்படாத தொகை: நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது நாமே பணி மாற்றம் காரணமாக சில நேரங்களில் வங்கி கணக்கை கண்காணிக்காமல் அப்படியே விட்டுவிடுவொம். இப்படி நீண்ட நாட்களாக வரவு, செலவு செய்யாமல் இருந்தால் அந்த வங்கி கணக்கு செயலற்ற வங்கி கணக்காக மாறிவிடும். வங்கி கணக்குகள் ஒரு ஆண்டு வரை செயல்படாமல் இருந்தால் அது செயல்படாத வங்கி கணக்காக மாற்றப்படும்.
ஏனென்றால் செயலற்ற வங்கி கணக்காக மாற்றப்பட்டால் தான் அதில் உள்ள பணத்தை மற்றவர்கள் எடுக்க முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அதாவது அந்த வங்கி கணக்கில் இருந்து மோசடி நடைபெறாமல் இருக்க இப்படி செயலற்ற வங்கி கணக்காக மாற்றப்படுவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. ஒரு ஆண்டு வரை வங்கி கணக்கு பரிமாற்றம் இன்றி இருந்தால் இப்படி செயலற்ற வங்கி கணக்காக மாற்றப்படும்.
உட்காம் இணையதளம்: செயலற்ற வங்கி கணக்காக 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் அந்த வங்கி கணக்கில் உள்ள பணமானது உரிமை கோரப்படாத பணமாக அறிவிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவர்னாஸ் பண்டுக்கு அனுப்பிவிடும். இந்த உரிமை கோரப்படாத பணத்தை நாம் எப்படி பெறுவது சில வழிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்காக உட்காம் (UDGAM) என்ற இணையதளத்தை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
இதில் வாடிக்கையாளர் தனது உரிமை கோரப்படாத வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முதலில் உட்காம் இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். பெயர் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து முதலில் லாக்-இன் செய்ய வேண்டும். வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், எந்த வங்கி என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஆதார் எண், பேன் எண், பிறந்த தேதி ஆண்டை பதிவிட வேண்டும்.
பணத்தை எப்படி எடுக்கலாம்: இதை செய்தால் உரிமை கோரப்படாத நமது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது தெரிந்துவிடும். இந்த இணையதளத்தில் தற்போது பாரத் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 7 வங்கிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அந்த உரிமை கோரப்படாத வங்கி கணக்கில் இருந்து பண்த்தை எடுக்கவும், அந்த வங்கி கணக்கை மீண்டும் பயன்படுத்தவும் முடியும்.
வங்கி கணக்கு தொடங்கியவர் உயிரோடு இல்லாத பட்சத்தில் அவரது வாரிசுகள் என்பதற்கான சான்றுகளை சமர்ப்பித்து அந்த வங்கிக்கணக்கை தொடரலாம் அல்லது பணத்தை எடுத்துக்கொள்ளலாம். செயலற்ற வங்கி கணக்குகள் இருந்தால் அதனை நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளோமோ.. அந்த வங்கிக்கே சென்று கிளைம் செய்து வங்கி கணக்கை மீண்டும் தொடர முடியும்.












Click it and Unblock the Notifications