மாதம் பிறந்தாலோ 5000 ரூபாய் ஊக்க தொகை.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. இளைஞர்கள் சேருவது எப்படி?
டெல்லி: சமூக பிரச்னைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து தான் வாழும் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சில காலம் அவர்களை தன்னார்வலராக பணியாற்ற வாய்ப்பளிக்கும் வகையில், 'தேசிய இளைஞர் தன்னார்வலர்' (National Service Volunteer -NSV) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
'தேசிய இளைஞர் தன்னார்வலர்'திட்டத்தில் சேர்ந்து தன்னார்வலராகப் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.5000 கவுரவத் தொகையும் வழங்கி வருகிறது. இந்த தேசிய இளைஞர் தன்னார்வத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேருவதற்கான தகுதித் தேவைகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்பதை இப்போது பார்ப்போம்.

'தேசிய இளைஞர் காவலர்கள்' (National Youth Corps' - NYC) என்று அழைக்கப்படும் 'தேசிய இளைஞர் தன்னார்வலர்கள் திட்டத்தை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் தலைமையிலான 'நேரு யுவ கேந்திரா சங்கதன்' என்ற அமைப்பு தான் கண்காணித்து கடந்த 2011 முதல் செயல்படுத்தி வருகிறது.
'தேசிய இளைஞர் தன்னார்வலர்' ஆக நீங்கள் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தன்னார்வலராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். அப்போது அவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும 5000 ரூபாய் கௌரவ சம்பளம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12,000 தன்னார்வலர்களை மத்திய அரசு தேர்வு செய்கிறது. அவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொகுதி அளவிலான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தில் தன்னார்வலராக சேர விரும்புவோரின் வயது 18 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலில் நான்கு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பை முடித்த மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆண்ட்ராய்டு போன் மற்றும் பல்வேறு வகையான ஆப்ஸைப் பயன்படுத்துவதில் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக சேர முடியாது. பகுதி நேர தன்னார்வலராகவும பணியாற்ற முடியாது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய இளைஞர் தன்னார்வலர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். இவர்கள் நேரு யுவஜன கேந்திரா அதிகாரிகளால் சமூக சேவைகளை வழங்க அந்தந்த பகுதிகளில் உள்ள தொகுதிக்கு அழைத்துச் சென்று பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஒரு மாவட்டத்தின் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்கள் சேர்ந்து ஒரு தொகுதியாகக் கருதி அந்தப் பகுதி பஞ்சாயத்துகளில் உள்ள சமூக பிரச்னைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து இந்தத் தன்னார்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அந்த பகுதியில் உள்ள சமூக பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்து தன்னார்வலர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். பெண் தன்னார்வலர்கள் என்றால், அப்பகுதி பெண்களை ஒன்று திரட்டி அங்கு நிலவும் பிரச்னைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பெற வைக்க வேண்டும். குறிப்பாக ஸ்கில் இந்தியா, க்ளீன் இந்தியா, ஃபிட் இந்தியா, ஆசாதிகா அம்ரித் கால் போன்ற நிகழ்ச்சிகளை ஊராட்சிகளில் நடத்த உதவ வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத பஞ்சாயத்துகளை உருவாக்க தன்னார்வலர்கள் அங்கு ஸ்வச் பாரத் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து அந்தந்த ஊராட்சிகளில் சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர் மன்றங்களை அமைப்பதில் தன்னார்வலர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
இத்திட்டத்திற்கு ஆன்லைனில் சேர விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், இளைஞர் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்தப் பகுதியின் முன்னணி நாளிதழ்களிலும் விளம்பரங்கள் கொடுக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- ஆதார் அட்டை
- 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
- சாதிச் சான்றிதழ் (SC, ST, OBC)
- உயர் கல்வித் தகுதிகள் ஏதேனும் இருந்தால் அதற்கான சான்றிதழ்கள்
- உங்கள் முகவரிச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம்/ரேஷன் அட்டை) போன்றவை தேவையாகும்.












Click it and Unblock the Notifications