"மொத்தம் 8000.." சிக்சர் அடிக்கும் ரயில்வே! வந்தே பாரத்தை வைத்து மெகா திட்டம்.. வாவ் நிஜமா வேற லெவல்
டெல்லி: இந்திய ரயில்வே பழங்காலத்திலேயே இருப்பதாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்களை வைத்து ரயில்வே மெகா திட்டத்தைப் போட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ரயில் நெட்வொர்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக வந்தே பாரத் இருக்கிறது. இந்தியாவில் எந்தவொரு பகுதிக்கும் குறைந்த செலவில் பயணிக்க வேண்டும் என்றால் ரயில்களே அதற்குச் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது.

இருப்பினும், இந்திய ரயில்கள் பல ஆண்டுகள் பின்தங்கிவிட்டதாகவும். இந்திய ரயில்வே துறையில் போதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை என்ற புகாரும் இங்கே தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அதற்குத் தீர்வாகவே வந்தே பாரத் இருந்தது.
வந்தே பாரத்: அதிவேகமாகப் பாயும் ரயில்கள் முழுக்க முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள் என அட்டகாசமாக இந்த வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டன. இது இந்தியா ரயில்வே எப்படி நவீனமயமாக்கலை நோக்கிச் செல்கிறது என்பதையே காட்டுவதாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு ரூட்களில் இந்த வந்தே பாரத் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை- பெங்களூர்- மைசூர், சென்னை- கோவை என இரு ரூட்களில் வந்தே பாரத் இயங்குகிறது. இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இதற்கிடையே வரும் நாட்களில் மேலும் கூடுதலாக வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தவும் இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இந்திய ரயில்வே இப்போது மெகா திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளது. அதாவது அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 8,000 வந்தே பாரத் பெட்டிகளைத் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே கையில் எடுத்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் காலங்களில் இதன் எண்ணிக்கையை மிக வேகமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மெகா திட்டம்: பொதுவாக, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் 16 பெட்டிகள் இருக்கும். இருப்பினும், சென்னை- கோவை உட்பட சில குறிப்பிட்ட ரூட்களில் 8 பெட்டிகளை மட்டுமே கொண்ட வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படும். இந்தச் சூழலில் தான் 8000 பெட்டிகளைத் தயாரிக்கும் இந்த மெகா திட்டத்தை இந்தியன் ரயில்வே கையில் எடுத்துள்ளது.
16 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயிலுக்கு ரூ.130 கோடி செலவாகும்.. சென்னையில் இருக்கும் ரயில் பெட்டி தொழிற்சாலையும் குறிப்பிட்ட அளவு வந்தே பாரத் ரயிலைத் தயாரிக்க உள்ளது. இப்போது சீட்டர் வந்தே பாரத் மட்டுமே தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு 3,200 ஸ்லீப்பர் வந்தே பாரத் கோச்சுகளுக்கான டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்க திட்டம்: இருப்பினும், வந்தே பாரத் ரயில்களை வேகமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்து வரும் ஆர்டர்கள் அனைத்துமே ரயில் பெட்டி தொழிற்சாலைக்குக் கிடைக்காது என தெரிகிறது.. அடுத்த ஆர்டரில் 1,600 பெட்டிகள் மட்டுமே சென்னை ஐசிஎப் பேக்டரிக்கு கிடைக்கும். மீதமுள்ள சுமார் 1,600 பெட்டிகள் ரேபரேலி மற்றும் கபுர்தலா தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இப்படி மொத்தம் 8000 பெட்டிகளை வரும் காலத்தில் அவர்கள் பெற உள்ளனர்.
இப்போது நாட்டில் 20+ வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் அதனை 75ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் 700 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்தாண்டில் இதன் எண்ணிக்கை 1000ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வந்தே பாரத் சீட்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் நிலையில், அடுத்தாண்டு தொடக்கத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகளும் வர உள்ளன.
இப்படி வந்தே பாரத் ரயில்களை வைத்தே இந்தியாவில் ரயில் பயணத்தை அடுத்த கட்டத்தை நோக்கி ரயில்வே துறை நகர்த்துகிறது. வரும் காலத்தில் மேலும் மேலும் வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களுக்கே முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications