திறக்க சில வாரங்களே இருக்கு.. அதற்குள் அயோத்தி ராமர் கோயில் பெயரை வைத்து இப்படியொரு பெரிய மோசடியா
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ள நிலையில், அதை வைத்து நடந்து வரும் பெரிய மோசடி இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பக்தர்களிடம் நன்கொடை வசூல் என்ற போர்வையில் மோசடி நடந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஹெச்பி: இது குறித்து விஹெச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தனது எக்ஸ் பக்கத்தில், "ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் சேத்ரா அயோத்தி, உத்தரப் பிரதேசம்" என்ற பெயரில் சிலர் போலியாக சமூக வலைத்தள பக்கத்தை உருவாக்கியுள்ளனர். ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி தருமாறு ஒரு க்யூஆர் கோடை பரப்பி மோசடி செய்கிறார்கள். உள் துறை அமைச்சகம், டெல்லி, மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு விஹெச்பி உறுப்பினர் தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டதாகவும் கோயில் கட்ட நிதி கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், "அந்த நபர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் என்னிடம், ராமர் கோயில் கட்ட நன்கொடை வேண்டும் என என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். உங்களால் முடிந்த தொகையைக் கொடுக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
மோசடி: உங்கள் பெயர், மொபைல் எண்ணைக் குறித்து வைத்துக் கொள்வோம். ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், உங்கள் அனைவரையும் அயோத்திக்கு அழைப்போம். நான் இங்கே உங்களைக் கவனித்துக் கொள்வேன். நான் அயோத்தியில் தான் இருக்கிறேன். நாம் பல போராட்டங்களைக் கடந்து இந்த கோயிலைக் கட்டுவது உங்களுக்குத் தெரியும். எனவே முடிந்ததைச் செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.
ராமர் கோயில் பெயரை வைத்து மக்களை ஏமாற்றும் முயற்சிகள் குறித்து சமீபத்தில் தான் தங்களுக்குத் தெரிய வந்ததாகவும் இந்த விவகாரத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஏமாற வேண்டாம்: இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், "ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர நியாஸ் நிதி என்ற பெயரில் யாரையும் நிதி வசூலிக்க அனுமதிக்கவில்லை. இதுபோன்ற மோசடிகளுக்கு மக்கள் பலியாகாமல் இருக்க வேண்டும். இவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணம்.. நாங்கள் முடிந்தவரை அனைவருக்கும் அழைப்பிதழ்களை அனுப்புகிறோம். ஆனால், நாங்கள் எந்த நன்கொடையையும் ஏற்க மாட்டோம். எனவே ஏமாற வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்குப் பக்தர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் அரசியல் தலைவர்கள் தொடங்கிப் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications