மத்திய பட்ஜெட்.. ராஜ்நாத் சிங்கை கவர்ந்த நான்கு விஷயங்கள்.. நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு
டெல்லி: பொருளாதார சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மூலதன உருவாக்கம் மற்றும் இந்தியாவில் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிக்கு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.
2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முற்றிலும் காகிதங்கள் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை மேட் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட டேப்லாய்ட் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.
ஒவ்வொரு ஆண்டுமே பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும். அந்த வகையில் இப்போது சீனாவுடனும், பாகிஸ்தான் உடனும் அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்திய ராணுவத்திற்கு இந்த நிதியாண்டில் 4.78 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பட்ஜெட்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதியை இந்த 2021-22ம் நிதியாண்டில் 4.78 லட்சம் கோடியாக உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி. இதில் ரூ .1.35 லட்சம் கோடி மதிப்புள்ள மூலதனச் செலவும் அடங்கி உள்ளது.
மிகமிக அதிகம்
பாதுகாப்புக்கான மூலதன செலவில் கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் பாதுகாப்புக்கான மூலதன செலவினங்களில் இதுவே மிக அதிகமான ஒதுக்கீடு ஆகும்" என்றார்.
பொருளாதார சீர்திருத்தங்கள்
ராஜ்நாத் சிங் வெளியிட்ட இன்னொரு ட்வீட்டில் பட்ஜெட்டை வெகுவாக பாராட்டி உள்ளார். "பொருளாதார சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மூலதன உருவாக்கம் மற்றும் இந்தியாவில் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சியின் 6 தூண்களின் அடிப்படையில் உள்ள இந்த பட்ஜெட். இந்தியா முழுவதற்குமான வளர்ச்சியின் மூலம் நாட்டை செழிப்பின் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும்" என்று கூறியுள்ளார்.
அதிக நிதி ஒதுக்கீடு
இதனிடையே மற்றொரு முக்கியத்துறையான சுகாதாரத்துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு அதிக அளவு நிதி தேவை என்பதால் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.