இது லிஸ்ட்லயே இல்லை.. கைதிகளுக்கு 5 கோடி பர்த்டே கிப்ட்.. டெல்லியை அதிர வைத்த சுகேஷ் சந்திரசேகர்
டெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது பிறந்தநாளையொட்டி சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதற்கு அனுமதி தருமாறும் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக புகார்கள் உள்ளது. இதனால் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தான் தனது பிறந்தநாளையொட்டி சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

முயற்சி
இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது: நீதித்துறை கைதிகளுக்கு உதவும் விவகாரத்தில் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விசாரணைக் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை.அன்பான உறவுகள் சிறையில் இருப்பதால் பல குடும்பங்களில் தற்கொலைகள் நடப்பதை நான் பார்த்துள்ளேன்.

பிறந்த நாள்
எனவே, உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும் கைதிகளுக்கு ஒரு தனி மனிதனாக ரூ.5 கோடியே 11 லட்சம் நிதி வழங்க இருக்கிறேன். இது முறையான வருவாய் மூலம் வந்த நிதி. இது எந்த குற்றப்பின்னணியில் இருந்தும் வந்தது அல்ல. அதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பிக்க தயாராக உள்ளேன்.

உதவுகிறோம்
நாளை மறுநாள் (மார்ச் 25-ந் தேதி) என்னுடைய பிறந்தநாள் என்பதால் எனது பிறந்தநாள் பரிசாக இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான பேருக்கு உணவளிக்கும் சாரதாம்மா தொண்டு நிறுவனம் மற்றும் சந்திரசேகர் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டு வருகிறோம்.

குறைந்த பட்ச உதவி
ஏழை நோயாளிகளுக்கு மாதம்தோறும் இலவச ஹீமோதெரபியும் அளித்து வருகிறோம். ஆனால் இங்கு (டெல்லியில்) ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனக்கு இதயமே வலிக்கிறது. அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் குடும்பங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே நான் என்னால் இயன்ற இந்த குறைந்தபட்ச உதவியை விரும்புகிறேன். அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும் ' என சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

விசாரணை கைதிகள்
இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து தற்போது வரை அவர் 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது பிறந்தநாளையொட்டி சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications