மோடி என்னை பார்த்து அப்படி சொன்னாரே..நானும் வழக்கு தொடுக்கிறேன்..பாய்ந்து வந்த காங். முன்னாள் எம்.பி
டெல்லி: கடந்த 2018 - ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ராமாயண இதிகாசத்தில் வரும் சூர்ப்பனகை கதாப்பாத்திரத்துடன் எனது சிரிப்பை ஒப்பிட்டு பேசி அவதூறு செய்தார். எனவே அவருக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான ரேணுகா சவுத்ரி ட்விட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் ராகுல் காந்தி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது காங்கிரஸ் தலைவராகவும் இருந்த ராகுல் காந்தி கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

ராகுல் மீது அவதூறு வழக்கு
பிரபல தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு பிரதமர் மோடியை அவதூறு செய்வது போல் உள்ளதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை
ராகுல் காந்தி ஒட்டு மொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக தனது மனுவில் புர்னேஷ் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்ததோடு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கியது.

எம்.பி பதவிக்கு ஆபத்து?
அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனிடையே ராகுல் காந்தி தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்து அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்படாத பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி பதவிக்கு ஆபத்து என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரையும் இந்த விவகாரம் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான ரேணுகா சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ரேணுகா சவுத்ரி கூறுமையில், "நாடாளுமன்றத்தில் கடந்த 2018 - ஆம் ஆண்டு பேசிய பிரதமர் மோடி, ராமாயண இதிகாசத்தில் வரும் சூர்ப்பனகை கதாப்பாத்திரத்துடன் எனது சிரிப்பை ஒப்பிட்டு பேசி அவதூறு செய்தார். எனவே அவருக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன். இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று பார்ப்போம்" என பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications