2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்காவிட்டால் 8 ஆண்டு அரசியல் அம்போ..சுப்ரீம்கோர்ட்டில் ராகுல் காந்தி
டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்காவிட்டால் தமது 8 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்தவர்கள் பண மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் என விமர்சித்திருந்தார். இது மோடி என பெயர் கொண்ட சமூகத்தினரை அவதூறு செய்வதாக கூறி பாஜகவின் புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் மேல்முறையீடு செய்வதற்காக இத்தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரத்து செய்யப்பட்டது. அவர் எம்.பி.யாக வென்ற கேரளா வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் ராகுல் காந்திக்கு எம்பி என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.
இதனிடையே ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் அமர்வு நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ராகுல் காந்தி முன் உள்ள ஒரே கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றம். ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முன்னரே அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி, தம்மையும் வழக்கில் இணைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் நேற்று 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ராகுல் காந்தி அரசியல் ரீதியாக அரசியல் எதிரிகளை நோக்கித்தான் பேசினார். ஆனால் மனுதாரர் தவறுதலாக புரிந்து கொண்டு தங்களைப் பேசியதாக வழக்கு தொடர்ந்திருந்தது அடிப்படையிலேயே தவறானது. ராகுல் காந்தி எந்த ஒரு சமூகத்துக்கு எதிராகவும் பேசவில்லை. அவரது பேச்சு முழுமையாக அரசியல் அடிப்படையிலானது. ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோடி என்பது ஒரு சமூகத்தின் பெயர் மட்டுமல்ல.. பல்வேறு சமூகங்கள், சமூகங்களின் உட்பிரிவுகளிலும் கூட இருக்கிறது. மோடி என்ற பெயரை தனிப்பட்ட நலன்களுக்காக ராகுல் காந்தி விமர்சிக்கவும் இல்லை. மனுதாரர் மோத் வணிக சமாஜ் என்ற அமைப்பைச் சேர்ந்தவராக குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் மோடி பெயருக்கும் என்ன தொடர்பு? அத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்காவிட்டால் ராகுல் காந்தியின் 8 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால் சிறை தண்டனைக்குப் பின் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதனை குறிப்பிடும் வகையில் 8 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications