'அவர் ஒரு போராளி.. கண்டிப்பாக மீண்டு வருவார்..' க்ரூப் கேப்டன் வருண் சிங் தந்தை நம்பிக்கை
டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த க்ரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வருண் சிங் ஒரு போராளி என்றும் அவர் கண்டிப்பாக வெற்றியுடன் மீண்டு வருவார் என்றும் அவரது தந்தை ஓய்வு பெற்ற கர்னல் கே.பி. சிங் தெரிவித்தார்.
கடந்த வாரம் கோவை சூலூர் ஏர்ஃபோர்ஸில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
எம்ஐ ரக ஹெலிகாப்டர் குன்னூர் அருகே சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர்.

ஹெகிகாப்டர் விபத்து
தற்போது வரை இந்த விபத்திற்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. வானிலை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் அதை ஆய்வு செய்யும் போது விபத்து குறித்துப் பல முக்கிய தகவல்கள் தெரிய வரும். தீப்பிடித்து எரிந்தவாறே அந்த ஹேலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியபடி மரத்தில் மோதி விழுந்தாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் க்ரூப் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உயிரிழந்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங், பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

எதுவும் சொல்ல முடியாது
இது தொடர்பாக அவரது தந்தை ஓய்வு பெற்ற கர்னல் கே.பி. சிங் கூறுகையில், "எனது மகன் எப்படி இருக்கிறார் என்பதைச் சரியாகக் கூற முடியாத அளவுக்கு அவரது உடல்நிலையில் மாற்றங்கள் உள்ளன. எனது மகனின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒரு சமயம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சில சமயம் மோசமாக உள்ளது. நம்மால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.

சிறப்பான சிகிச்சை
அவர் இப்போது மிகச் சிறந்தவொரு மருத்துவ குழுவினரின் கைகளில் உள்ளார். அங்கு உள்ள சிறந்த மருத்துவ குழுவினர் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாடு முழுவதும் வருண் சிங் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கின்றனர். முன் பின் அறிமுகம் இல்லாத பலரும் கூட வருண் சிங் குணமடைய வேண்டும் என என்னைச் சந்தித்துக் கூறுகின்றனர்.அவரை (வருண்) பார்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இப்படியொரு அன்பும் பாசமும் தான் வருணுக்கு கிடைத்துள்ளது.

அவர் ஒரு போராளி
வருண் சிங் ஒரு போராளி. அவர் கண்டிப்பாக வெற்றியுடன் மீண்டு வருவார். இதையெல்லாம் தாண்டி அவர் கண்டிப்பாக வெளியே வருவார்" என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கர்னல் கேபி சிங் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறார். முன்னதாக வருண் சிங்கை காப்பாற்ற அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications