துப்பாக்கி குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் விங் கமாண்டர் உடல் அடக்கம்!
டெல்லி: துபாய் ஏர் ஷோவில், தேஜஸ் போர் விமானத்தில் பறந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். அவரது உடல் இமாச்சலப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
நவ.21ம் தேதி இந்த விபத்து நடந்தது. இதனையடுத்து உயிரிழந்த நமன்ஷ் சியால் உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டுவரப்பட்டது. இமாச்சல பிரதேசத்தின் காங்ரா விமான நிலையத்தில் அவரது உடல் வந்திறங்கியதும், இந்திய விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விமான நிலையத்திலிருந்து, அவரது பூர்வீக கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. உடல் அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன்னர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சுலூர் விமானப்படை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியாப்பனவார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்தார். இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வீரருக்கு மரியாதை செலுத்தினர்.
34 வயதான சியால், இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நாகரோட்டா பகவான் வட்டத்தில் உள்ள பாட்டியால்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2009 இல் இந்திய விமானப்படையில் இணைந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரி ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications