தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக 'தமிழ்நாடு பேட்ஜ்' ஐபி சிறப்பு இயக்குநர் டிவி ரவிச்சந்திரன் நியமனம்!
டெல்லி: நாட்டின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக உளவுத்துறை (IB)சிறப்பு இயக்குநராக பதவி வகித்த தமிழக பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான டிவி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகரான ராஜீந்தர் கன்னா, தேசியப் பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக ஐபி சிறப்பு இயக்குநரான டிவி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி டிவி ரவிச்சந்திரன். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவரான டிவி ரவிச்சந்திரனின் தந்தை, அம்மாநில அரசின் வனத்துறை செயலாளராக பணிபுரிந்தார்.
தமிழ்நாட்டின் பல நகரங்களில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றியவர். நாகர்கோவில் ஏஎஸ்பியாக முதன் முதலில் பணியில் இணைந்தார். பின்னர் கடலூர் எஸ்பி, தமிழக காவல்துறை கியூ பிரிவு எஸ்பி, ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை எஸ்பியாகவும் பதவி வகித்தவர் டிவி ரவிச்சந்திரன் ஐபிஎஸ்.
2000-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு சென்ற டிவி ரவிச்சந்திரன் ஐபிஎஸ், உளவுத்துறையான IB-ல் டெல்லியில் பணியாற்றினார். சென்னையில் உள்ள உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஜெர்மனியின் பெர்லினில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணிபுரிந்தார்.

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உளவுத்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2023-ல் உளவுத்துறை சிறப்பு இயக்குநராக பதவி வகித்த நிலையில் தற்போது தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போது தேசிய பாதுகாப்புதுணை ஆலோசகருமான ரஜீந்தர் கன்னா, தேசியப் பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்












Click it and Unblock the Notifications