"நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருக்காது, ஏனென்றால்.." கேப் விட்டு கெஜ்ரிவால் சொன்ன மேட்டர்
டெல்லி: ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கெஜ்ரிவால், தனது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிறையில் இருந்த கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள அவர், ஆம் ஆத்மிக்கு மக்கள் வாக்களித்தால் மீண்டும் சிறைக்குச் செல்லும் தேவை இருக்காது எனக் கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவால்: இதற்கிடையே பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய கெஜ்ரிவால் தனது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்தார். சிறையில் இருந்த போது டெல்லி மக்களுக்குச் சேவை செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், நல்வாய்ப்பாக இறைவனின் அருளால் தனக்கு ஜாமீன கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பரபர பேச்சு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இங்கே சிலர் 20 நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.. ஆனால், நீங்கள் சரியான பட்டனை வாக்குப்பதிவில் அழுத்தினார்கள் என்றால்.. ஆம் ஆத்மிக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்தால் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. மக்களாகிய உங்களிடம் தான் அதிகாரம் உள்ளது" என்று கெஜ்ரிவால் கூறினார்.
பின்னணி: கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சு இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதைக் காரணமாகச் சொல்லி ஜாமீன் கோரியிருந்தார். ஜூன் 3ம் தேதி வரை கெஜ்ரிவால் தரப்பு ஜாமீன் கேட்ட நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சரணடைந்து மீண்டும் திகார் செல்ல வேண்டும்.
இடைக்கால ஜாமீன் காலத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த காலத்தில் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்ய எந்தத் தடையும் இல்லை.. அதேநேரம் டெல்லி முதல்வரின் அலுவலகம் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை கெஜ்ரிவால் வெளியே வந்தார். மறுநாளே அவர் டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் சென்று பிரச்சாரம் செய்தார்.
நாடு முழுக்க பிரச்சாரம்: தொடர்ந்து அவர் டெல்லியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுக்க சென்று அவர் "இந்தியா" கூட்டணி சார்பில் பிரச்சாரம் செய்கிறார். வரும் நாட்களில் அவர் லக்னோ, ஜம்ஷத்பூர் மற்றும் மும்பையில் இந்தியா கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்வார்.
முன்னதாக நேற்றைய தினம் கெஜ்ரிவால் லோக்சபா தேர்தலுக்கு 10 உத்தரவாதங்களை முன்வைத்தார். நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம், 200 யூனிட் வரை இலவசம் மின்சாரம் வழங்குவோம், .. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும்.. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்படும்.. அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட 10 உத்தரவாதங்களை அவர் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications