அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் ‘தூக்கப்பட்டால்’ அடுத்த சிஎம் யாரு? பரபரக்கும் ஆம் ஆத்மி!
டெல்லி: அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் புதிய முதல்வர் யார் என்கிற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. ஏற்கனவே துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்னமும் மணீஷ் சிசோடியா ஜாமீனில் கூட விடுதலையாகவில்லை.

இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனடிப்படையில் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக இருக்கிறார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணை முடிவடையும் போது அமலாக்கத்துறை கைது செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள். இதனை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படலாம் என்பதையே இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனிடையே டெல்லியில் இன்று அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் அடுத்த முதல்வர் யார்? என்கிற விவாதம் ஆம் ஆத்மி கட்சியில் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் சீனியர்களாக இருப்பவர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின், விஜய் நாயர். இவர்களில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி அமைச்சரவையில் தற்போது கெஜ்ரிவாலுக்கு அடுத்ததாக இருப்பவர் அமைச்சர் அதிஷி. ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் புதிய முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வராக அமைச்சர் அதிஷி நியமிக்கப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே டெல்லியில் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அடுத்தடுத்த சோதனைகள், விசாரணைகளால் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications