ஜனநாயகத்தை பாதுகாக்க செங்கோலை அகற்றத்தான் வேணும்.. சமாஜ்வாதி எம்பி சவுத்ரி மீண்டும் வலியுறுத்தல்
டெல்லி: லோக்சபாவில் இருந்து தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்கே சவுத்ரி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல், லோக்சபாவில் தனி கூண்டில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டது. நாடு விடுதலை அடைந்த போது
ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக முதல் பிரதமர் நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டது.

செங்கோலின் பின்னனி என்ன?: நேருவிடம் கொடுப்பதற்காக ராஜாஜி கேட்டுக் கொண்டதால் தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் 5 அடி நீள செங்கோலை தயாரித்து டெல்லிக்கு தனி விமானத்தில் கொண்டு வந்தார். அப்போது திருவாவடுதுறை ஆதீனம், ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை ஆகிய 3 பேர் மட்டும் அந்த விமானத்தில் பயணித்தனர். இந்த செங்கோல் மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு ஆட்சி மாற்றத்தின் குறியீடாக ஜவஹர்வலால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த செங்கோலை புறக்கணித்துவிட்டதாக கூறி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது உரிய மரியாதைகள் செலுத்தப்பட்டு சபாநாயகர் இருக்கைக்கு அருகே தனி கூண்டில் வைக்கப்பட்டுள்ளது.
செங்கோலுக்கு எதிர்ப்பு: தற்போது 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் போது 3-வது முறையாகப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி செங்கோலை வணங்காமல் அரசியல் சாசனத்தையே வணங்கினார். இதனை சுட்டிக்காட்டி சமாஜ்வாதி கட்சிஎம்பி சவுத்ரி, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது செங்கோல். மன்னராட்சி, ஏகாதிபத்தியத்தின் அடையாளமே செங்கோல். ஆகையால் லோக்சபாவில் செங்கோலை அகற்றிவிட்டு அரசியல் சாசனப் புத்தகத்தை வைக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி சவுத்ரி வலியுறுத்தி இருந்தார்.
தமிழ் கலாசாரம் குறித்து பாஜக கவலை: இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "இந்தியா" கூட்டணி தமிழ், தமிழர் கலாசாரத்துக்கு எதிராக செயல்படுவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் விமர்சித்தனர். ஆனால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எம்பி தமது கட்சியின் நிலைப்பாடு சரியானது என தெரிவித்திருந்தார். அதேபோல நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்ற வேண்டும் என திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவனும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செங்கோலின் மதிப்பு குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் தெரியாது. தமிழ் மொழி, கலாசாரத்தின் மதிப்பும் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை என விமர்சித்திருந்தார்.
மீண்டும் வலியுறுத்திய சமாஜ்வாதி: இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி சவுத்ரி தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். இங்கே அரசாட்சி நடைபெறவில்லை. மக்களாட்சிதான் நடைபெறுகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதற்காக செங்கோல் கொண்டு வந்து வைக்கப்பட்டது? இந்திய நாடாளுமன்றம் என்பது அரசியல் சாசனத்தின் படி செயல்படுகிறதே தவிர செங்கோல் வழியில் அல்ல. இது ஜனநாயகம். ஆகையால் செங்கோலை மீண்டும் உரிய மரியாதையுடன் அருங்காட்சியகத்திலேயே வைக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனில் செங்கோலை அகற்றித்தான் ஆக வேண்டும். அதற்கு பதிலாக அதாவது செங்கோல் இருக்கும் இடத்தில் அரசியல் சாசனப் புத்தகத்தை வைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications