சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரம்: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 30 ஆம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சூதாட்ட செயலிகளை சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரித்து பிரபலப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தெலுங்கானா மாநிலம் மியாபூர் நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொடுத்த புகாரில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்துவதன் மூலம் அதிக அளவில் கமிஷன் தொகைகளை சில நடிகர், நடிகைகள் பெறுவதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மியாபூர்நகர் போலீசார் விசாரணை நடத்தி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லட்சுமி மஞ்சு, நிதி அகர்வால் உள்பட 29 பிரபலங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் பஞ்சகுட்டா, சைபராபாத், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சூதாட்டச் சட்டம், 1867 ஐ மீறி சட்டவிரோத பந்தய செயலிகளை ஊக்குவித்ததாகக் கூறி, நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் யூடியூபர்கள் உள்பட 29 பேர் மீது அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை அமலாக்க இயக்குனரகம் பதிவு செய்துள்ளது.
பஞ்சகுட்டா, மியாப்பூர், சைபராபாத், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட 5 தனித்தனி வழக்குகளை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 29 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனை விவரங்களை ஆய்வு செய்யவும், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 30 ஆம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கபட்டு இருந்தது. அதில், ‛‛கடந்த 2016ம் ஆண்டில் ஜங்லீ ரம்மியை விளப்படுத்தினேன். ஆனால் ஒரு ஆண்டுக்குள் எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இது தொழில்நுட்ப ரீதியான சட்டத்துக்கு உட்பட்டது என்றாலும் நெறிமுறைகளில் பிரச்சனை இருந்தது. அதன்பிறகு எந்த சூதாட்ட செயலியையும் விளம்பரப்படுத்தவில்லை'' என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications