வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு மழை எப்படி இருக்கும்! வானிலை மையம்
டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை தொடங்கியது முதலே ஓரளவு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தச் சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு உள்ளது.
மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதி மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ள நிலையில், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடையும். கடலில் இருந்து 7.6 கிலோ மீட்டர் உயரத்தில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஓடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை நோக்கி வடமேற்கு திசையில் நகரும்.
மழை இருக்கும்
இதன் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமான் தீவுகள், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல 10ஆம் தேதிக்குப் பின்னர் மத்தியப் பிரதேசம், குஜராத், உள்ளிட்ட வட மேற்கு மாநிலங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
ஆந்திர கடலோர பகுதிகள், கர்நாடகாவில் வடக்கு உள்மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல கேரளா மற்றும் தெலங்கானாவிலும் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள்
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
காற்று வீசும்
மேலும், கடலோர மாவட்டங்களில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.