அப்பாடா! "இந்தியாவில் வெப்ப அலை முடிந்தது.. இனி மழைதான்!" வானிலை மையம் சூப்பர் நியூஸ்! பெரிய நிம்மதி
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மக்களுக்கு நிம்மதி தரும் வகையில் இந்திய வானிலை மையம் ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது.
உலகெங்கும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் உலகின் குறிப்பிட்ட பகுதிக்குப் பாதிப்பு என்றில்லாமல் உலகெங்கும் தீவிரமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டும் கோடைக் காலத்தில் வெப்பம் நம்மை வைத்துச் செய்து வருகிறது. இந்தியாவில் பல பகுதிகளில் வெப்ப அலை அடித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
வெப்பம்: கடந்த பிப். மாதம் வெப்பமே இந்தியாவில் உச்சம் தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிப். மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதன் பின்னர் மார்ச் மாதம் வெப்பம் அதையும் தாண்டியது. தமிழ்நாட்டிலும் கூட பல இடங்களில் வெப்பம் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் கூட வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே கடும் கோடையில் இருந்து ஓய்வு அளிக்கும் வகையில் நல்ல ஒரு செய்தியை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாட்டில் இத்தனை காலம் வைத்துச் செய்து வந்த வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், இதன் பிறகு வெப்பம் மெல்லக் குறையும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவின் ஆறு மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மலைப்பகுதிகளில் "கனமழை" பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையத்தின் ஆய்வாளர் ஆர்.கே.ஜெனமணி கூறுகையில், "இன்று இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் வெப்பம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படும். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளோம்" என்றார்.
வானிலை மையம்: ஒடிசாவின் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் எச்ஆர் பிஸ்வாஸ் கூறுகையில், "சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்.. வெப்பநிலையில் குறைவதால் மே 27ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.. டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் 110 டிகிரி வெப்பத்தைத் தொட்டுள்ளது. இதனால் மின்சார பயன்பாடும் நாடு முழுக்க புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், வெப்பம் குறைந்து மழை பெய்வது பொதுமக்களுக்குப் பெரிய நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications