கிராமப்புறங்களில் 4 மடங்கு அதிகரித்த உயிரிழப்புகள்.. கொரோனா 2ஆம் அலையால் பாதிப்பு அதிகம்..ஷாக் தகவல்
டெல்லி: கொரோனா முதல் அலையுடன் ஒப்பிடுகையில் 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பும் சரி, உயிரிழப்புகளும் சரி கிராமப்புறங்களில் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் ஆலையின் கோரத் தாண்டவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையைப் போல இல்லாமல், கொரோனா 2ஆம் அலையின் தீவிரம் மிக அதிகமாகவே உள்ளது.
இந்த இரண்டாம் அலையில் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல இரட்டை மரபணு மாறிய வைரஸ் போன்ற உருமாறிய கொரோனா வகைகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகம்
இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவலாக கொரோனா 2ஆம் அலையில் கிராம புறப் பகுதிகள் அதி தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலையுடன் ஒப்பிடுகையில் கிராம புறங்களில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளது மத்திய அரசின் தரவுகளின் மூலம் தெரியவருகிறது.

நான்கு மடங்கு அதிகம்
மத்திய அரசின் பின்தங்கிய பிராந்திய மானிய நிதியத்தின் (BRGF) கீழ் உள்ள 243 மாவட்டங்களில் மே 5ஆம் தேதி நிலவரப்படி 39.16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த கடந்த செப்டம்பர் மாதம், இங்கு 9.5 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் இந்த மாவட்டங்களில் 4.2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 7.15 லட்சமாக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
இதில் மிகவும் கவலையளிக்கும் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகளும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,555ஆக இருந்த கொரோனா உயிரிழப்புகள் தற்போது 36,523ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்புகளில் கிராமப்புறங்களின் பங்கு 11.5%இல் இருந்து 16%ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அதிகரிக்கலாம்
மத்திய அரசு வெளியிடும் தினசரி அறிவிப்புகளில், நகரப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பது குறித்த தகவல்கள் இடம் பெறுவதில்லை. இருப்பினும், இந்தத் தகவல்களை ஆராயும்போது கிராமப்புறங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது மிகத் தெளிவாகத் தெரிகிறது. கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார கட்டமைப்புகள் மட்டுமே இருக்கும் என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications