2 கோடி பேர் ஓசி ரயிலில் உல்லாச பயணம்..அபராதம் மட்டும் இத்தனை கோடி? வாய் பிளக்க வைக்கும் ரிப்போர்ட்
டெல்லி : 2021-22 ஆம் நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த ஒரு கோடியே 78 லட்சம் பேர் சிக்கி உள்ளதாகவும், அவர்களிடம் அபராதமாக ஆயிரத்து 17 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க பட்டதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.
"இந்தியன் இரயில்வே " இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது உலகிலுள்ள மிகப்பெரிய ரயில் நெட் ஒர்க்குகளில் ஒன்றாகும். ஆண்டுக்கு 500 கோடி மக்கள் இந்திய ரயில்களில்பயணிக்கின்றனர்.
ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 16 இலட்சம் பணியாளர்கள் ரயில்வேயில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள ரயில்வே இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்கள். இந்த பாதைகளில் தினமும் 14,444 ரயில்கள் இயக்கப்படுகிறது.
டிக்கெட் இல்லா பயணம்
இந்நிலையில் இந்திய ரயில்களில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த ஒரு கோடியே 78 லட்சம் பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவல்களை இந்திய ரயில்வே கொடுத்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.78 கோடிக்கும் அதிகமான டிக்கெட் இல்லாத பயணிகளையும், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்களை வைத்திருந்த பயணிகளையும் ரயில்வே பிடித்துள்ளது. இது 2019-2020 ஆம் ஆண்டின் கோவிட்-அல்லாத நிதியாண்டில் இருந்து சுமார் 79 சதவீதம் அதிகரித்துள்ளது
ஆயிரம் கோரி அபராதம்
2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால், போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோது, அத்தகைய பயணிகளின் எண்ணிக்கை 27 லட்சமாக இருந்தது. ஏப்ரல்-டிசம்பர் 2021இல், 1.78 கோடிக்கும் அதிகமான பயணிகள் டிக்கெட் இல்லாமல்/முறையற்ற டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்களுடன் பயணம் செய்தது கண்டறியப்பட்டது என்றும் ஆர்டிஐ பதிலில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.1,017.48 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
காரணம் என்ன?
இப்போதும் கூட, கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், பல விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் வரையறுக்கப்பட்ட சேவைகள் மட்டுமே உள்ளன என்பதே டிக்கெட் இல்லாத பயணத்தின் இத்தகைய எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படாத 2019-2020 நிதியாண்டைப் பொறுத்தவரை, 1.10 கோடி பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக பிடிபட்டுள்ளனர் மற்றும் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ 561.73 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேவையில் ஏற்றத்தாழ்வு
ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை, அதாவது 2020-21 நிதியாண்டு வரை, 27.57 லட்சம் பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக பிடிபட்டுள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து ரூ.143.82 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளைப் பொருத்தவரையில் தேவைக்கும் சேவைக்கும் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உண்மையில், ரயில்வே வழங்கிய தரவுகளின்படி, இருக்கை முன்பதிவு அட்டவணையை இறுதி செய்த பிறகு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 52 லட்சத்திற்கும் அதிகமானோர் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரயில்களில் பயணிக்க முடியவில்லை என கூறியுள்ளது.