அதிகரிக்கும் காய்ச்சல்-சுவாச நோய்கள்..என்ன காரணம்..ஐசிஎம்ஆர் சொல்வது என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி
நாட்டில் அதிகரித்து வரும் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஐசிஎம்ஆர் முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
டெல்லி: குளிர்காலம் முடிந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த சூழலில், நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.
இன்னும் சொல்லப்போனால் கொரோனாவை பலரும் மறக்கும் அளவுக்கு இயல்பு நிலை நாட்டில் திரும்பி விட்டது. தற்போது குளிர்காலம் முடிந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த சூழலில், நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் குணமான பிறகும்
நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வரும் இந்த காய்ச்சலால் பலருக்கும் காய்ச்சல் குணமான பிறகும் சில நாட்களுக்கு தொடர் இருமல், சளி, உடல் வலி போன்ற தொந்தரவுகள் நீடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சீசன் காய்ச்சல் பரவலை இந்திய மருத்துவ கவுன்சில் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இன்புளுயன்சா ஏ வைரஸ் காரணம்
இந்த நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது.. பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்தும் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் அதிகரிக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் பிரச்சினைகளுக்கு இன்புளுயன்சா ஏ வைரசின் துணை வகையான எச்.3 என் 2' முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

A H3N2 வைரஸ் பாதிப்பு
H3N2 என துணை வகை வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. பிற இன்புளுயன்சா துணை வகை (sub type) H3N2 பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தற்போது வரை கடுமையான சுவாச பாதிப்பு மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு A H3N2 வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுவாச பாதிப்புகள் மற்றும் A H3N2 பாதிப்புடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது.

மூச்சு விடுவதில் சிரமம்
86 சதவீதம் பேருக்கு இருமல் பாதிப்பு இருந்தது. 27 சதவீதம் பேருக்கு மூச்சு விடுவதில் சிரமம், 16 சதவீதம் பேருக்கு வீசிங், 16 சதவீதம் பேருக்கு நிமோனியா போன்ற பாதிப்புகள், 6 சதவீதம் பேருக்கு வலிப்பு பாதிப்பும் இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்3என்2 (H3N2) வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வறட்சி, காய்ச்சல், உடல் வலி, டயரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். இந்த பருவ காய்ச்சல் பாதிப்பு 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இருப்பினும் காய்ச்சல் என்பது 3 நாளில் குணமாகும்.

எப்படி பாதுகாப்பாக இருப்பது
இந்த 'INFLUENZA A SUBTYPE H3N2' வைரஸ் பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்ற விவரங்களையும் ஐசிஎம்.ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அறிகுறிகள் இருந்தால் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கினை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும். நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கண்கள் , மூக்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால் பேராசிட்டம்மால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எதையெல்லாம் செய்யக்கூடாது
கைகளை குலுக்குததல் உள்பட வாழ்த்துக்களை தொட்டு பரிமாறிக்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆண்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைகள் இன்றி மருந்து மாத்திரைகளை எடுக்கக் கூடாது. நெருக்காமாக உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications