பெட்ரோல் விலையில் 33% வரி மத்திய அரசுக்கு போகிறது, இது மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமம்: ப.சிதம்பரம்
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள வரிகள் பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமமானது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் புது உச்சம் தொட்டு வருகிறது. மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 111 ரூபாய் என்ற அளவுக்கு சென்றுவிட்டது .
வெகுநாட்களாகவே தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது.

கொள்ளைக்கு சமம்
இந்த நிலையில்தான் என்டிடிவி செய்தி சேனலுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: பெட்ரோல் விலையில் மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசின் வழியாக செல்கிறது. அதாவது 33 சதவீதம் ஒரு பொருளின் மீது வரி விதிக்கப்படுகிறது. இது கொள்ளைக்கு சமமானது.

யாருக்கு எவ்வளவு போகிறது
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 102 ரூபாய் வாடிக்கையாளர் செலுத்தினால், 42 ரூபாய் ஆயில் கம்பெனிகளுக்கு செல்கிறது. 33 ரூபாய் மத்திய அரசுக்கு வரியாக போகிறது. 24 ரூபாய் மாநில அரசுக்கு வரியாக போகிறது. 4 ரூபாய் டீலருக்கு கமிஷனாக போகிறது. 102 ரூபாயில் 33 ரூபாய் மத்திய அரசுக்கு வரியாக செல்கிறது என்றால், சதவீத அடிப்படையில் சுமார் 33 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று அர்த்தம். என்னை பொறுத்த அளவில் இது ஒரு கொள்ளை.

பேராசையுடன் வரி
நான் பார்த்ததிலேயே பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் மிகவும் பேராசை மிக்க அரசாக இருக்கிறது. ஒரே ஒரு வரி ஆதாரத்தை நம்புவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் அனைவரும் ஒரே மாதிரி வரி விதிப்பது ஏற்புடையது இல்லை. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது ஏழை, பணக்காரர்கள் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் 33 சதவீதம் வரிதான் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது பேட்டிகளில், ஏழைகள், பணக்காரர்களுக்கு ஒரே மாதிரி வரி விதிப்பு இருப்பது சரியான சமூக நீதி இல்லை என்று கூறி வருகிறார். வரி விதிப்பது தப்பில்லை. ஆனால் எல்லோரும் பொதுவாக பயன்படுத்தும் பொருட்களுக்கு ஒரே மாதிரி வரி விதித்தால் எல்லா மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் அவரது கருத்தும். ஆனால், பெட்ரோல், டீசல் மீதான வரியால்தான் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.

மேலும் விலை உயரும்
தற்போதைய நிலையில் உலகளாவிய அளவில் கச்சா எண்ணைக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே அடுத்தடுத்த நாட்களில் உலகம் முழுக்கவே எரிபொருள் விலை உயரப் போகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications