தலைமை இல்லை.. "இந்தியா" கூட்டணி லோக்சபா தேர்தலில் இதைத்தான் செய்யும்.. மம்தா பானர்ஜி அதிரடி
டெல்லி: எந்த அஜெண்டாவும் இல்லை, தலைமையும் இல்லை எந்த ஒரு யுக்தியும் இல்லை. இந்தியா கூட்டணி அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி கூறினார்.
வரும், ஏப்ரல் மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயத்தில் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்பட 29 கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சி தனது முழு கவனத்தையும் அங்கு திருப்பியது. இதனால், இந்தியா கூட்டணிக்கு சில சலசலப்புகள் எழுந்தன. இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் சீட் ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததாக அகிலேஷ் குற்றம் சாட்டினார்.
மேலும் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கூட்டணிக்குள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியின் கனவு தவிடுபொடியானது.
இத்தகைய சூழலில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட விடமாட்டோம் என்றும், அனைத்து தொகுதியிலும் இந்தியா கூட்டணி போட்டியிடும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:- இந்தியா கூட்டணிக்கு திட்டம் எதுவும் இல்லை. தலைமையும் கிடையாது. நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதியிலும் இந்தியா கூட்டணி போட்டியிடும்.
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியினை தராமல் காலம் தாழ்த்துகிறது. குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. எனினும் மக்களுக்காக மாநில அரசு இதனை தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications