கோர்த்துவிட்டாங்களே ‘இந்தியா’! இரண்டே கூட்டம்.. கேஸ் விலை ரூ.200 குறைந்துவிட்டது!” -ட்வீட்டில் கலாய்
டெல்லி: சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்து இருக்கும் நிலையில், இது குறித்து புதிய காரணத்தை கூறி உள்ளார்கள் இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பன்மடங்கு உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் நின்றுவிட்டாலும் கேஸ் விலையேற்றம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 ஆக குறைத்துள்ளது மத்திய அரசு.

உஜ்வாலா யோஜனா திட்ட பயணாளிகளுக்கு ரூ.400 விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல், ஆந்திரா, தெலுங்கானா, மணிப்பூர் மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு கேஸ் விலையை குறைத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கி இருக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்கள் விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள மம்தா பானர்ஜி ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "இந்தியா கூட்டணி கடந்த 2 மாதங்களில் 2 கூட்டங்களை கூட்டியது. தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து இருக்கிறது. இதுதான் இந்தியாவின் பவர்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே ட்விட்டரில், "இது பொய் வாக்குறுதி அரசு. ரூ.200 குறைவதால் என்ன ஆகிவிடப்போகிறது. இந்த அரசு ஆட்சிக்கு வந்தபோது கேஸ் விலை ரூ.400 என்ற நிலையில்தான் இருந்தது. இன்று அதன் விலை ரூ.1,150 ஆக அதிகரித்து உள்ளது.
அவர்கள் கேஸ் விலையை ரூ.500 அல்லது ரூ.700 என்ற அளவில் குறைக்கவில்லை. இதெல்லாம் தேர்தலுக்கான பொய் வாக்குறுதி. பணவீக்கம் குறித்து அவர்கள் எதுவும் கவலைப்படவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையிழப்பின் காரணமாகவே கர்நாடக மக்கள் அவர்களை நிராகரித்தார்கள். எனவே மத்திய அரசு அச்சத்தில் உள்ளது.
இதுகுறித்து பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவிக்கையில், "இதுதான் அழுத்தம். 2 இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு பிறகு சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 வரை மத்திய அரசு குறைத்து உள்ளது. எல்லாம் இறுதியான பிறகு இந்தியா கூட்டணியின் முழு வலிமையை பார்ப்பீர்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications