நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கனும்! இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
டெல்லி: நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்தியா கூட்டணி எம்பிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்திய அரசியலமைப்பின் மத சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக ஜி ஆர் சுவாமிநாதன் முடிவு எடுப்பதாக கூறி நேற்று அவரை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மான நோட்டீசை சபாநாயகரிடம் கொடுத்திருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேயே இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோருவது தொடர்பாக திமுக அடங்கியுள்ள இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து அவரை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்காக கூட்டணிக் கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இந்த தீர்மானத்தில் பிரியங்கா காந்தி உள்பட 107 எம்பிக்கள் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் இந்த கையெழுத்துகள் அடங்கிய தீர்மான நோட்டீசை பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் தொல் திருமாவளவன், துரை வைகோ முன்னிலையில் திமுக எம்பிக்கள், கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோர் சபாநாயகர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து கொடுத்தனர்.
இந்த நோட்டீஸில், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இந்திய அரசியலமைப்பின் மத சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக முடிவெடுப்பதாகவும், இவரது நடத்தை நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மீது கேள்விகளை எழுப்புவதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications