12 வயது குழந்தைக்கும் பலன்.. அறிவித்த ஃபைசர்.. கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ரெடியாகும் இந்தியா
டெல்லி: அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் கொரோனா நோய்க்கு எதிரான மூன்றாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைகளில் 90 சதவீதம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அறிவித்த நிலையில் அந்த மருந்தை இந்தியாவில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து நிர்வாகத்திற்கு, தேசிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிகே பால் செயல்பட்டு வருகிறார்.

இந்த குழு கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது, வினியோகம் போன்றவற்றை முடிவு செய்வது உள்ளிட்ட பணிகளையும், அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்காவில் உள்ள ஃபைசர் நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உயர்மட்ட குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வமாக இது பற்றி தகவல் வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் இந்த குழுவை சேர்ந்த உறுப்பினரான டாக்டர் ரன்தீப் அளித்த ஒரு பேட்டியின்போது, ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சேமித்து வைக்க வேண்டியது கட்டாயம். அதே நேரம் அமெரிக்காவின் மார்டனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கு -25 டிகிரி செல்சியஸ் போதுமானது என்று தெரிவித்து இருந்தார்.
எனவே மார்டனா தடுப்பூசியை பெறுவதில் இந்திய ஆர்வம் காட்டுவதாக தெரிந்தது. இருப்பினும் வெற்றிக்கான சதவீதம் ஃபைசர் தடுப்பூசியில் அதிகமாக இருப்பதால் தற்போது இந்த பக்கம் இந்தியாவின் கவனம் சென்றுள்ளது.
இந்த மாதம் முதல் ஃபைசர் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால பிரிவினருக்கு வழங்குவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சம் என்னவென்றால் 12 வயது குழந்தைகளுக்கு கூட 3வது கட்ட தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்ற தடுப்பூசிகளின் சோதனையில் குழந்தை பருவத்தினர் இடம் பெறவில்லை. அந்த வகையில் இது மேலும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications