பிரதமர் மோடி விமானம் உங்க வான்வெளியை கடந்து செல்ல அனுமதிங்க.. பாக்.குக்கு இந்தியா கோரிக்கை
டெல்லி: பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் திடீர் தாக்குதல் நடத்தியது இதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தடை விதித்தது. தற்போதும் இந்த தடை நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 11 வழித்தடங்கள் உள்ளன. இதில் 2 வழித்தடத்தில் மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வழித்தடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை தடை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவர் கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளியைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த வழியை பயன்படுத்தவில்லை என்றால் மாற்று வழியில் இந்திய விமானம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டும்.
இந்த வழியில் சென்றால் கிர்கிஸ்தான் செல்ல 4 மணி நேரம் ஆகும். அதுவே மாற்றுப் பாதையில் சென்றால் 8 மணிநேரம் ஆகும். எனவே பிரதமரது விமானம் பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் நாட்டிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இந்திய வான்வழியாகச் செல்ல அனுமதி கோரினார்.
அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. அதுபோல இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 22, 23-ம் தேதிகளில் பிஷ்செக் நகருக்கு செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது அதற்கு பாகிஸ்தான் அரசும் அனுமதி அளித்திருந்தது.












Click it and Unblock the Notifications