எல்லையில் அத்துமீறி பாக்., தாக்குதல்... பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
டெல்லி: அத்துமீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் இராணுவம் 1,962 எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 50 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 மற்றும் 26-ந் தேதிகளில் நடத்திய திடீர் தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் உட்பட பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருவது குறித்தும், பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்தும் வருத்தத்தை தெரிவித்துள்ளோம்.
பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை அனுமதிக்கக்கூடாது என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.