நான்கே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது
டெல்லி: இந்தியாவில் நான்கே நாளில் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6.36 லட்சமாக உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,05,637 என்கிறது https://www.covid19india.org புள்ளி விவரம். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,36,602 ஆகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 25,069.
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 2,84,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 1,58,140 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,194 பேர் மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளில் 63.25% குணமடைந்துள்ளனர்- பாதிப்பு எண்ணிக்கை 3,31,146: மத்திய அரசு
மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,369. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,236. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416.
டெல்லியில் 1,18,645, கர்நாடகாவில் 51,422, குஜராத்தில் 45,567, உ.பி.யில் 43,441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,8876. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 24915. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 612815.
இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 35 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு நாளில் உயிரிழப்பும் 600ஐ தாண்டியது.