ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்க வரிக்கு நடுவே இந்தியா செய்த சம்பவம்
டெல்லி: டெல்லியில் இன்று இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 27 நாடுகள் கூட்டமைப்பை கொண்ட ஐரோப்பிய யூனியனுடன் இன்று கையெழுத்தாக உள்ள தடையற்ற ஒப்பந்தம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரியை விதித்துள்ளதால், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மாற்றுவழிகளை இந்தியா யோசித்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் இன்று பிரதமர் மோடி - ஐரோப்பிய யூனியன் தலைவர் இடையே நடைபெறும் உச்சி மாநாடு சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இடையில் இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான் தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது.
இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் இறக்குமதி வரியை 90 சதவீதத்துக்கு மேல் குறைக்க இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக ஜவுளி மற்றும் காலணி தயாரிப்பு துறையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும், வரிகள் குறைந்து விடும்.
சில பொருட்களுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, பருவநிலை மாற்றம், முக்கியமான டெக்னாலஜி துறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானாக அறிவித்த பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளை ஒப்பந்தம் ஏற்படுத்தும். சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலியை இந்த ஒப்பந்தம் பலப்படுத்தும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிகப்பெரிய ஒப்பந்தம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு வரலாற்றுச் சாதனையை இந்தியாவும் ஐரோப்பாவும் சேர்ந்து நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
"இன்று ஐரோப்பாவும் இந்தியாவும் வரலாறு படைத்துள்ளன. நாம் எல்லா ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்ற மிகப்பெரிய ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இருபுறமும் பயன் பெறும் வகையில், 2 பில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு தடையில்லா வர்த்தக மண்டலத்தை உருவாக்கியுள்ளோம். இது தொடக்கம் மட்டுமே. எங்கள் முக்கியமான உறவை இன்னும் வலுப்படுத்துவோம்,"என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications