இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். முதற்கட்டதாக 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளை பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டும் வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து சில முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்ட்யூட் ஆப் இந்தியா மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
வரும் ஜனவரி மாதத்தின் எந்த வாரத்திலும் இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். முதற்கட்டமாக 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நாடு முழுவதும் 260 மாவட்டங்களில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 97 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது நம்பிக்கை அளிக்கிறது.