சினூக் ஹெலிகாப்டர்! லைட் வெயிட் பீரங்கிகள்! சீன எல்லையில் யுஎஸ் ஆயுதங்களை குவித்த இந்தியா!
டெல்லி: இந்தியா -சீனா இடையேயான எல்லை பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன ராணுவ தளவாடங்களை எல்லையில் குவித்துள்ளது இந்திய ராணுவம்.
அந்தவகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள், அதிநவீன எடை குறைந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியா குவித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் தாக்குதல் திறன் சீனாவுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

கடினமான மலைக்குன்றுகளில் கூட இந்த வகை போர்க்கருவிகளை மிக சுலபமாக இயக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
பூடான் திபெத் இடையே உள்ள தவாங் பீடபூமியை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அந்தப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக தவாங் பகுதியை கிழக்கு திபெத் எனப் பெயரிட்டு சீனா சொந்தம் கொண்டாட நினைப்பதால் அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
சீனா கடந்த வாரம் உயர்ரக ஆயுதங்களை எல்லையில் குவித்த நிலையில் அதற்கு ஒரு படி மேலாக இந்தியா இப்போது அமெரிக்க தயாரிப்பு அதிநவீன போர்க்கருவிகளை எல்லையில் இறக்கியிருக்கிறது. சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்புச் சட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தவறான யூகங்களை கொண்டிருப்பதாக இந்தியா பற்றி சீனா விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள் ஒரு கேம் சேஞ்சராக திகழக்கூடும் என பைலட் மேஜர் கார்த்திக் தெரிவித்திருக்கிறார். சினூக் வகை ஹெலிகாப்டரை பொறுத்தவரை அனைத்துவகையான கால நிலையையும், கடுமையான நிலபரப்பையும் சமாளித்து இயங்கக்கூடிய திறன் பெற்றதாகும். குறிப்பாக மலைபாங்கான பகுதிகளில் இந்த வகை ஹெலிகாப்டர்களை எளிதாக இயக்க முடியும்.
இதனிடையே சர்ச்சைகுரிய எல்லை பகுதிக்கு இந்திய பொறியாளர்கள் மூலம் அமைக்கப்பட்டு வரும் இரு வழி சுரங்கப்பாதையானது உலகிலேயே மிக நீளமான மற்று உயரமான சுரங்கப்பாதையாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தி அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணிகள் திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக முடிவடையும் என கூறுகிறார் சுரங்கப்பாதை திட்ட இயக்குநர் பிரக்சித் மேஹ்ரா.
சுரங்கப்பாதை பணிகள் மட்டும் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கிடைத்துவிட்டால், சீன ராணுவத்தின் கண்களில் படாதபடி இந்திய ராணுவத்தின் அசைவுகள் இருக்கும் என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications