'எங்களது தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து அவதூறு பரப்புவதா?'.. ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!
டெல்லி: இந்தியா தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளை ஐ.நா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் இந்தியா ஐ.நா.வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது.

புதிய விதிமுறைகள்
புதிய விதிமுறைகளை செயல்படுத்த இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் வழங்கியது. இந்த காலஅவகாசம் முடிந்துள்ள நிலையில் பேஸ்புக், வாட்ஸ்அப் , கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தன. ஆனால் டுவிட்டர் மட்டும் இதனை ஏற்காமல் மறுத்து வருகிறது.

ஐ.நா கடும் கண்டனம்
தவறான தகவலை பரப்பி நாட்டில் பாதுகாப்பாற்ற சூழலை உருவாக்கும் நபர்களை களையெடுக்கவே இந்த புதிய சட்டவிதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால் இந்த சட்டத்துக்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சட்டம் சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கட்டுப்பாடுகளை ஒரு போதும் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

இந்தியா பதிலடி
இந்த நிலையில் ஐ.நா.வின் இந்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) சிறப்புக் கிளையின் சமீபத்திய அறிக்கை தவறான, மிகைப்படுத்தப்பட்ட மற்றும் அவதூறான கருத்துக்களை கூறியதற்கு இந்தியா கவலை கொள்கிறது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் பேச்சுரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் கொடுக்கிறது.

பெண்களுக்கு துணையாக இருக்கும்
சமூக ஊடகங்களின் சாதாரண பயனர்களை மேம்படுத்துவதற்காக இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடக தளங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுபவர்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு மன்றமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் இந்த சட்ட விதிகள் துணையாக இருக்கும் என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்த குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications