பொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது
Recommended Video
டெல்லி: பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழுவை சேர்ந்த மற்றொரு உறுப்பினரும், பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசியுள்ளார். இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருப்பது ஷமிகா ரவி. நாட்டின் பொருளாதாரம் கட்டமைப்பு மந்தநிலையை அடைந்துள்ளது என்று, அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு உறுப்பினராக மட்டுமின்றி, ப்ரோக்கிங்ஸ் இந்தியா திங் டேங்க், ஆய்வு இயக்குநராகவும் இருப்பவர், ஷமிகா ரவி.
டிவிட்டரில், கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது, ஷமிகா ரவி இந்த தகவலை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அவசர தேசிய வளர்ச்சி
அத்வைத் என்ற டிவிட்டர் பயனாளி ஒருவர், இந்திய பொருளாதாரத்தில், வீழ்ச்சி இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா என்று கேட்க, அதற்கு, ஷமிகா ரவி பதிலளித்துள்ளார். அந்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது: நாம் கட்டமைப்பு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். அவசரமாக தேசிய வளர்ச்சி திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. பல அமைச்சரவை துறைகளும் காலக்கெடு நிர்ணயித்து இதைநோக்கி பயணிக்க வேண்டும். பெரிய சீரமைப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. யோசனைகள் மட்டுமே போதாது. நிதி அமைச்சகம் பொருளாதார உயர்வை பார்த்துக்கொள்ளும் என நினைப்பது, ஒரு அலுவலகம் தனது வளர்ச்சியை, ஃபைனான்ஸ் துறை மட்டும் பார்த்துக் கொள்ளும் என்று நினைப்பதற்கு சமம். இவ்வாறு ஷமிகா ரவி தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக்
நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார், நேற்றுதான், பொருளாதார சரிவு பற்றி பேசியிருந்தார். இன்று, ஷமிகா ரவிவும் பேசியுள்ளாார். நிதித்துறையில் நிலவும், முன் எப்போதும் இல்லாத சரிவை சீர் செய்ய, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தனியார் முதலீட்டுக்கு அரசு ஊக்கம் கொடுக்க வேண்டும். தனியார் முதலீட்டாளர்கள் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்திருந்தார்.
ரகுராம் ராஜன்
கடந்த திங்கள் கிழமை, பிரதமரின் ஆலோசனைக் குழுவின் தலைவரான பிபெக் டெப்ராய், "சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (ஜிஎஸ்டி) இந்த பொருளாதார மந்தநிலை, மாறக்கூடியதா அல்லது கட்டமைப்பு சார்ந்ததா என்பதை ஆலோசிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
அதே நாளில், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலையை "மிகவும் கவலையளிப்பதாக" கூறினார். மின்சாரம் மற்றும் வங்கி சாரா நிதித் துறைகளில் உள்ள சிக்கல்களை உடனடியாக சரிசெய்யவும், தனியார் துறை முதலீட்டைத் தூண்டுவதற்காக சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் அவர் அரசுக்கு அறிவுறுத்தினார்.
வீழும் இந்திய பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஐந்தாண்டில் இல்லாத குறைவாக, 5.8 சதவீதமாக சரிந்தது. இது 17 காலாண்டுகளில் மிக மெதுவான வளர்ச்சியாகும். ஆனால் வீழ்ச்சி இதை விட தீவிரமாக இருக்க கூடும். பொருளாதார வளர்ச்சியயை அரசு மதிப்பிடுவதற்கான வழிமுறை குளறுபடிகளோடு உள்ளது என்று பல பொருளாதார வல்லுநர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்போது, முதல் முறையாக, பிரதமருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்தும், பொருளாதார வீழ்ச்சி பற்றிய தகவல்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வந்துதானே ஆக வேண்டும்?