இந்தியா 3வது ஸ்டேஜ் வந்தாச்சு.. அதிக டெஸ்ட் நடந்தால்தான் உண்மை தெரியும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
டெல்லி: 21 நாள் நாடு தழுவிய லாக்டவுனின் உண்மையான தாக்கத்தை அறிய ஒரு "அதிவேக" கொரோனா வைரஸ் சோதனை தேவைப்படுகிறது, என்று கூறுகிறார்கள், சுகாதார வல்லுநர்கள். போதிய பரிசோதனை செய்யப்படவில்லை என்பதால்தான், இந்தியா மூன்றாவது ஸ்டேஜில் இருப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தெரியவில்லை என்று சிலர் எச்சரிக்கிறார்கள்.
Recommended Video
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 24 நள்ளிரவு முதல் இந்தியா நாடு தழுவிய லாக்டவுன் செய்துள்ளது.
"லாக்டவுன் மற்றும் சமூக இடைவெளிய ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் காரணமாக, குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளன" என்று சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
நுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்பு
பலன்
இருப்பினும், இந்தியா இன்னும் மோசமான நிலையை தாண்டி வரவில்லை என்றும், பெரிய அளவிலான சோதனை மட்டுமே ஒட்டுமொத்த நிலையை தெளிவுபடுத்த முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். "லாக்டவுன் உண்மையிலேயே பலன் கொடுக்க வேண்டுமென்றால் சோதனையை அதிவேகமாக நடத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்கிறார் நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தின் இயக்குநர் ராமணன் லக்ஷ்மிநாராயண்.
3வது ஸ்டேஜ்
சர் கங்கா ராம் மருத்துவமனையின் புகழ்பெற்ற நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த்குமார், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின், மூன்றாம் கட்டத்தில் இந்தியா உள்ளது, இது சமூக பரவுதல் கட்டமாகும். இப்போது மூன்றாம் நிலைக்கு வந்துள்ளோம். அதாவது, வெளிநாடு செல்லாதவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாதவர்களுக்கும் நோய் பரவும் நிலை 3வது ஸ்டேஜ். பயணங்கள் இல்லாதவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்புகள் இல்லாத பல நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். எனவே இது 3வது ஸ்டேஜ்தான், என்று அவர் கூறினார்.
ஒப்பீடு வேண்டாம்
அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற பிற நாடுகளுடன் இந்தியாவின் நோயாளிகள் எண்ணிக்கை விகிதத்தை ஒப்பிட கேட்டபோது, ஒப்பீடு செல்லுபடியாகாது என்று அவர் கூறினார். ஒப்பீடு இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவில், நோயாளிகள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. நாம் ஏறும் வளைவில் இருக்கிறோம், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது லாக்டவுனை தளர்த்தினால், அது பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது, என்றும் அவர் கூறினார். நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கும் போது மட்டுமே லாக்டவுன் அகற்றப்பட வேண்டும், இது உடனடியாக நடக்க வாய்ப்பு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
டெஸ்ட் செய்யுங்கள்
டாக்டர் டாங்ஸ் லேபின் நிறுவன இயக்குனர் டாக்டர் நவின் டாங், கூறுகையில், சோதனை விரைவாக இல்லாவிட்டால் லாக்டவுனின் முழு நோக்கமும் வீணாகிவிடும் என்றார். "நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை காணும்போது, அரசு மற்றும் தனியார் துறையில் பி.சி.ஆர் சோதனைகளைச் செய்யும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நமது நாட்டின், சோதனைத் திறனை அதிகரிக்க வேண்டும், இது இல்லாமல் லாக்டவுன் முடிவை தீர்மானிக்க முடியாது," என்று அவர் கூறினார்.
புதிய வழிகாட்டுதல்
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய விரைவான ஆன்டிபாடி பரிசோதனையை மேற்கொள்ள இந்தியாவின் உச்சபட்ச மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான, ஐ.சி.எம்.ஆர் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, மூக்கு மாதிரிக்கு பதிலாக இரத்த மாதிரிகளில் சோதனை செயல்படுகிறது. இந்த வகை, ஆன்டிபாடி சோதனைகளின் முடிவுகள் 15-30 நிமிடங்களுக்குள் கிடைக்கும்.