பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் தரமான "இரு" மரண அடிகள்.. நாட்டின் பொருளாதாரமே ஆடி போகும்! சபாஷ்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானின் பொருளாதாரத்தையே மொத்தமாக முடக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த வாரம் காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தானின் பொருளாதாரத்தையே மொத்தமாக முடக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. பாகிஸ்தான் மீதான இந்த இரட்டை பொருளாதாரத் தாக்குதல் அந்நாட்டின் நிதி அமைப்பையே மொத்தமாக முடக்கிவிடும்..
இந்தியாவின் திட்டம்
முதலில் FATF எனப்படும் நிதி நடவடிக்கை டாஸ்க் போர்ஸ் பாகிஸ்தானை க்ரே பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. அடுத்து பொருளாதார ரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் தொகுப்பை வழங்கச் சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், சர்வதேச அமைப்புகளின் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தவறாகப் பயன்படுத்துவதாகச் சொல்லி, அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த டீல் ஜூலை 2024இல் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிதி நடவடிக்கை டாஸ்க் போர்ஸ்
இதில் முதலில் நிதி நடவடிக்கை டாஸ்க் போர்ஸ் நடவடிக்கை. சர்வதேச நிதிகளை வளர்ச்சிப் பணிகளுக்குப் பெற நிதி நடவடிக்கை டாஸ்க் போர்ஸில் பிளாக் செய்யப்படாமல் இருக்க வேண்டும். கடந்த ஜூன் 2018இல் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அனுப்புவதால் பாகிஸ்தான் க்ரே பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது. தீவிரவாதிகளுக்குத் தொடர்புடையவர்கள் மீது கைது, சொத்து பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த 2022 அக்டோபரில் தான் க்ரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.
இந்த நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் க்ரே பட்டியலில் இணைக்கப்பட்டால்.. அது பாகிஸ்தானுக்குப் பெரிய சிக்கலாகிவிடும். இதனால் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை அசைத்துவிடும். இதன் காரணமாகவே அடுத்து ஜூன் மாதம் கூடும் FATF கூட்டத்தொடருக்கு முன்பு முக்கிய உறுப்பு நாடுகளுடன் பேசி, பாகிஸ்தான் க்ரே பட்டியலில் இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
சர்வதேச நாணயம் உதவி
அடுத்து சர்வதேச நாணயத்தின் உதவி.. பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்குப் பல மணி நேர மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை கூட ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் பொருளாதாரமே மொத்தமாகச் சீர்குலையும் அளவுக்கு நிலைமை இருந்தது. இதனால் சர்வதேச நாணய நிதியம் மனிதாபிமான அடிப்படையில் கடன் வழங்க முன்வந்தது.
பாகிஸ்தான் முடங்கும்
ஆனால், சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகள் வழங்கும் நிதியை பாகிஸ்தான் முறையாகப் பயன்படுத்துவது இல்லை. அப்படிப் பயன்படுத்தி இருந்தால் பாகிஸ்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்காது. சர்வதேச அமைப்புகளின் நிதிகளை பாகிஸ்தான் அமைச்சர்கள் மோசடி செய்வதாகவும் அது பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கவும் பயன்படுவதாகத் தகவல்கள் உள்ளன. எனவே, இதை எடுத்துச் சொல்லி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இந்தியா நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதுவும் பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications