சீனாவை விட புத்திசாலியாக செயல்படும் இந்தியா.. மொத்த தேசத்தையும் பூட்டிய மோடி.. இதுதான் பெஸ்ட்!
டெல்லி: சீனாவில் வுகான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அங்கு 3000- க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் அந்த நகரம் மட்டுமே முடக்கப்பட்டது. ஆனால் இந்தியா என்ற ஒரு நாடு மட்டும்தான் மக்களின் நலன் கருதியும் பாதுகாப்புக்காகவும், நோய் பரவலை தடுக்கவும் ஒட்டுமொத்தமாக முடக்கியது.
சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் சீனா முழுவதும் பரவிய நிலையில் அந்த நாடு முழுவதும் கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர்.
ஆயிரக்கணக்கானோர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் தொடர்ந்து பரவி கொண்டே இருந்ததால் வுகான் நகரை முடக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது.

வுகான் நகர மக்கள்
அதன் படி ஜனவரி மாதம் 23 -ஆம் தேதி முதல் நோயின் மையமான வுகான் நகரம் மற்ற உலக நாடுகளின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. அந்த நகரத்தில் மட்டும் லாக் டவுன் போடப்பட்டது. நள்ளிரவில் அரசு போட்ட இந்த உத்தரவை அடுத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அனைத்து சாலை போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. அதிகாரிகளின் அனுமதியில்லாமல் வுகான் நகர மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

வுகான் நகரம்
சீனாவின் வுகான் நகரமானது மிகப் பெரிய வணிக மையமாக செயல்பட்ட நிலையில் ஹூபய் மாகாணத்தில் இந்த நோய் மிகவும் மோசமாக பரவியதை அடுத்து அந்த மாகாணத்தில் உள்ள சில நகரங்கள் முடக்கப்பட்டன. அதாவது அடுத்த 4 நாட்களுக்கு 6 கோடி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்றும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. எனினும் இந்த முடக்கம், நோயை கட்டுப்படுத்த போதாது என சீன அதிகாரிகள் கருதினர்.

21 நாட்கள்
இதையடுத்து சீனாவின் 18 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களை முடக்கியது. பிப்ரவரி மத்தியில் பார்த்தோமேயானால் 23 கோடி வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டனர். எனினும் சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. ஆனால் இந்தியாவை எடுத்துக் கொண்டோமேயானால் நேற்று இரவு 12 மணியிலிருந்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுகிறது.

21 நாட்களுக்கு
அத்தியாவசிய பணியாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யாரும் வெளியே வரக் கூடாது என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது கொரோனாவின் சமூக பரவலை தடுக்கும் முயற்சி என தெரிவித்தார். நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே 21 நாட்களுக்கு பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா
இத்தாலி , அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் செய்த தவறை நாமும் செய்யக் கூடாது. எனவே 21 நாட்களுக்கு மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். கொரோனாவை ஒழிக்க ஒட்டுமொத்தமாக முடங்கும் முதல் நாடு இந்தியா மட்டுமே. இந்த நோய் பரவல், பலி எண்ணிக்கை சீனாவில் அதிகரிக்க பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த தவறை நாம் செய்யாவிட்டால் இந்தியாவில் நோய் பரவலை எளிதில் தடுத்துவிடலாம். முதலில் சீனாவில் 81 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. உயிரிழப்பு என பார்த்தோமேனால் 3,276 பேர் ஆவர். ஆனால் இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு என பார்த்தால் 15 பேர் ஆவர்.

16.5 சதவீதம்
500 பேர் பாதிக்கப்பட்டதற்கு இந்தியா நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை முடக்கிவிட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 120 கோடியில் 100 கோடி பேர் முடங்குகின்றனர். அதாவது மொத்த மக்கள்தொகையில் 82.5 சதவீதம் பேர் ஆவர். ஆனால் மக்கள்தொகையில் உலகளவில் முதல் நாடான சீனா, மொத்த மக்கள்தொகையில் 16.5 சதவீதம் அதாவது வெறும் 23 கோடி பேரை மட்டுமே முடக்கியது.

வித்தியாசம்
அடுத்தப்படியாக மற்றொரு வித்தியாசம் என்னவென்றால் சீன நகரங்களில் வுகான் நகரத்தில் மக்கள் முடக்கப்பட்டபோது அத்தியாவசிய பொருட்களை வாங்க இரு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஒரே நேரத்தில் எல்லா மக்களும் கடைகளில் குவிந்ததால் நோயின் தாக்கம் அதிகரித்தது. பலி எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமானது. ஆனால் இந்தியாவில் போக்குவரத்துகள் முடங்கினாலும் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களை மக்கள் தினமும் வாங்கிக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதிலும் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவுவதை தடுக்க முடியும். இவையும் சீனாவில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணங்களாகும்.












Click it and Unblock the Notifications