இந்தியா or பாரத்? இதில் எது சரி? அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்றம் சொல்வது என்ன? முழு விபரம்
டெல்லி: இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் ‛பாரத்' என இந்தியாவை அழைக்கலாமா? இல்லையா? என்பது குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றியும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. நம் நாட்டின் பெயர் ‛இந்தியா' என இருக்கும் நிலையில் அந்த பெயரிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கான மசோதாவை மத்திய பாஜக அரசு வரும் 18 ம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு டின்னர் விருந்து வழங்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் President of India என்பதற்கு பதில் President of Bharat என அச்சிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியின் முதல் நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற உள்ளதாக பரவும் தகவலுக்கு பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் இந்த தகவலை வரவேற்றுள்ளனர். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றலாம். அதோடு பாரத் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவில் உள்ளது என அவர்கள் கூறி வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் ‛பாரத்' என்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது? மேலும் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலாவது அரசியலமைப்பு சட்டம் சொல்வதை நாம் பார்க்கலாம்.
அரசியலமைப்பு சட்டத்தில் ‛பாரத்' என்ற பெயர் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1 என்பது ‛‛இந்தியா அதாவது பாரத் (தமிழில் பாரதம்) மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்று என்பது இந்தியாவை ‛இந்தியா' என்றும், ‛பாரத்' என்றும் அழைக்கலாம் என்பதோடு அதனை முறையாக அங்கீகாரமும் அளிக்கிறது.
இனி 2வது விஷயத்தை பார்ப்போம். அதாவது இந்தியாவை ‛பாரத்' என அழைக்க வேண்டும் என கடந்த 2006ல் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2016 மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர், நீதிபதி யுயு லலித் அமர்வு விசாரித்தது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்திய அரசியலமைப்ப சட்டப்பிரிவு 1யை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த மனு என்பது விசாரணைக்கு ஏற்றது இல்லை. ஏனென்றால் இந்தியாவை இந்தியா என்றும், பாரத் என்றும் அழைக்கலாம் எனக்கூறினர். அதன்பிறகு 2020ல் மீண்டும் இதேபோல் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், ‛‛இந்தியாவை இந்தியா என்றும், பாரத் என்றும் அழைக்கலாம். இது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications