இந்தியா vs பாகிஸ்தான் போர் வெடித்தால்.. உலக நாடுகளின் ஆதரவு யாருக்கு இருக்கும்? விரிவான அலசல்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா கடுமையான தாக்குதலை நடத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் என்ன நடக்கும்! எந்த நாட்டிற்கு யார் ஆதரவாக நிற்பார்கள் என்பது குறித்து இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த மிக மோசமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரும் சூழலே இருக்கிறது. இதனால் எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் ரெட்டிட் தளத்தில் இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே முழு வீச்சில் போர் வெடித்தால் இந்தியாவுடன் எந்தெந்த நாடுகள் நிற்கும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பாகிஸ்தான்
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இப்போது பாகிஸ்தானுக்குச் சீனா மட்டுமே ஆதரவாக நிற்கிறது. போர் வெடிக்கும் போதும் சீனா மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். சீனா ராஜதந்திர ஆதரவை மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு மேம்பட்ட ஆயுதங்களையும் கூட வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இந்தியப் பாதுகாப்புத் துறை வல்லுநர் சரீன் போர் இது தொடர்பாக வேறு விதமான கருத்துகளைக் கூறியுள்ளார்.. அதாவது போர் ஏற்படும்போது உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்படலாம் என்று அவர் கூறியிருக்கிறார். சீனா மட்டுமின்றி துருக்கி மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகளும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றும் இஸ்ரேல் மட்டுமே இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
சீனா, துருக்கி
அவர் மேலும் கூறுகையில்,"சீனா மட்டுமின்றி துருக்கி, அஜர்பைஜான் ஆகியவை கூட பாகிஸ்தானை ஆதரிக்கலாம்.. இந்த நாடுகள் மீது இந்தியா நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களுடன் வர்த்தக டீல், பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இஸ்ரேல் மட்டுமே ஒரே கூட்டாளியாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான அப்போதுள்ள நிலைமையைப் பொறுத்தே முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
ரெட்டிட் தளத்தைச் சேர்ந்தவர்களும் கூட யாரும் ஆதரவாக வர மாட்டார்கள் என்றே சொல்லி வருகிறார்கள். போர் வெடிக்கும் போது சும்மா பேச மட்டுமே ஆட்கள் இருப்பார்கள் என்றும் நாம் மட்டுமே நமக்காகப் போராட வேண்டும் என ரெட்டிட் யூசர்கள் கருத்து கூறி வருகிறார்கள். போர் நடக்கும் போது நம் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பார்கள்.. ஆயுதங்களையும் அதிக விலைக்கு விற்கத் தொடங்குவார்கள் என்றும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியா ஆதரவு
இன்னும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாக இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அமீரகம் வரும் என்றும் மேற்கத்திய நாடுகள் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் எனக் கூறி வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கணிக்க முடியாதவை என்றும் பதிவிட்டுள்ளனர்.
அதேநேரம் இதில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஆப்கானிஸ்தான் இருக்கலாம். ஆப்கன், பாகிஸ்தான் இரண்டிற்கும் கடந்த காலங்களில் நல்லுறவு இருந்தாலும் இப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே இருந்து வருகிறது. குறிப்பாகத் தனக்கு எதிராக எப்படியெல்லாம் பாகிஸ்தான் செயல்பட்டது என்பதை இப்போது தாலிபான்கள் உணர்ந்து கொண்டனர். இதனால் போர் ஏற்படும்போது ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் நிற்கலாம்.

ஆர்மீனியா ராணுவ ரீதியாக ஒரு வலுவான நாடாக இல்லை என்றாலும் கூட அவர்கள் இந்தியாவுடன் நிற்கலாம்.. ஆர்மீனியா இந்தியா இடையேயான உறவு மேம்பட்டு வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் இந்தியாவுக்காக நிற்கலாம் என ரெட்டிட் யூசர்கள் கூறி வருகிறார்கள்.
இன்னும் சில யூசர்கள் உலக நாடுகள் நடுநிலையாக இருந்தால் கூட அது இந்தியாவுக்கே வெற்றியைத் தரும் எனப் பதிவிட்டு வருகிறார்கள். சொந்த ராணுவத்தை நம்பாமல் வெளிநாடுகளை நாம் அதிகம் நம்பியிருக்கக்கூடாது என்றும் அப்படி நம்பினால் உக்ரைனில் நடந்தது போலவே குழப்பம் ஏற்படலாம் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.
ரஷ்யா
ரஷ்யாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த காலங்களில் அமெரிக்கா நமக்கு எதிராக இருந்தபோதும் கூட ரஷ்யாவே பக்கபலமாக நின்றுள்ளது. அப்போது பல சூழல்களில் சர்வதேச அரங்கில் இந்தியாவை ரஷ்யா பாதுகாத்துள்ளது. ஆனால், இப்போது ரஷ்யா சீனா இடையேயான உறவு விஷயங்களைச் சிக்கலாக்குகிறது. இருப்பினும், பாகிஸ்தானுடன் போர் என வரும்போது இந்தியா ஆதரவு நிலைப்பாட்டையே ரஷ்யா எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இவை எல்லாம் போர் வெடித்தால் எந்த நாடு யாருக்கு ஆதரவாக இருக்கும் என்பது குறித்த கணிப்பு.. அதேநேரம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. முதலில் ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளன.. மேலும், நிலம் மற்றும் வான் எல்லைகள் மூடப்பட்டன.. சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது பாகிஸ்தான் முதுகெலும்பையே உடைத்ததற்கு ஈடானது எனச் சொல்லப்படுகிறது.
அதிகரிக்கும் அழுத்தம்
அதேநேரம் தற்போதைய சூழலில் இந்தியா ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கும் மோடிக்கும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. 2019ல் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருந்தது. அதுபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் இந்தியா நடத்த வேண்டும் என்பதே பலரது வலியுறுத்தலாக இருக்கிறது.

தள்ளாடும் பாகிஸ்தான்
உலக நாடுகளின் ஆதரவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பாகிஸ்தானை விட இந்தியா இப்போது மிக நல்ல நிலையிலேயே இருக்கிறது. உலகின் மிக பெரிய ராணுவங்களில் ஒன்றையும் வலுவான பொருளாதாரத்தையும் இந்தியா கொண்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளால் தள்ளாடி வருகிறது.
அங்கு விலைவாசி உச்சத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரமே கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு, உள்ளூரிலும் பதற்றம் அதிகமாக உள்ளது. இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகவே உள்ளது.
இந்தியாவுக்கே வெற்றி
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் கூடாது என்பதை ஐநா வலியுறுத்தி வருகிறது. சவுதி, ஈரான் நாடுகள் போரைத் தடுக்கும் முயற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்தியா பாகிஸ்தான் இடையே முழுவீச்சில் போர் வெடிக்க வாய்ப்பு குறைவு.. அப்படியே வெடித்தாலும் பாகிஸ்தானை மிக எளிதாக இந்தியா வீழ்த்திவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.












Click it and Unblock the Notifications