’இந்தியா முக்கியத்துவம் வாய்ந்தது’ ஜெய்சங்கரை சந்தித்ததும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொடுத்த மெசேஜ்
டெல்லி: இந்தியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிறகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மார்க் ரூபியோ, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்த கூட்டத்திற்கு இடையே அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். நியூயார்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அமெரிக்காவில் ஜெய்சங்கர்
வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, பாராமெடிக்கல், மற்றும் முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவு செயலர் ருபியோ, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:-
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ட்வீட் பதிவு
"ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு நடுவே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். வர்த்தகம், எரிசக்தி உள்பட எங்கள் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் கடும் மோதல் போக்கு நிலவுகிறது. இந்தியா மீது இதுவரை இல்லாத அளவிற்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில்தான் இத்தகைய கடுமையான வரி விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் முடிவுக்கு கண்டனம்
இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, ஹெச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தினார் டிரம்ப். அதாவது, ஹெச்-1பி விசா கட்டணம் 4,500 டாலரிலிருந்து (ரூ. 3.7 லட்சம்) 100,000 டாலராக (ரூ. 88.28 லட்சம்) உயர்த்தப்பட்டது. இந்தியர்களே ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் சூழலில், இது இந்தியர்களை மிகக் கடுமையாக பாதிக்கிறது.
டிரம்பின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவிலேயே பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட டெக் நிறுவனத் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை டிரம்பின் இந்த முடிவு தடுக்கும் என அவர்களின் குற்றச்சாட்டு இருந்தது.
தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடுவோம்
ஏற்கனவே வரி விதிப்பு, அதற்கு பின்பு ஹெச்-1பி விசா கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து டிரம்ப் அதிரடி காட்டிய நிலையில், இரு நாட்டு வெளியுறவு செயலர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் பெற்றதாகும். அமெரிக்க வெளியுறவு செயலரை சந்தித்த பிறகு தனது எக்ஸ் பதிவில் ஜெய்சங்கர் கூறியதாவது:-
"இன்று காலை நியூயார்க்கில் அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். முக்கியமான விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட, நீடித்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டோம். நாங்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications