மீனவர் படுகொலை.. பாக்.தூதரக அதிகாரியை அழைத்து மத்திய அரசு கண்டனம்..இலங்கையை கண்டிப்பது எப்போதாம்?
டெல்லி: பாகிஸ்தான் கடற்படையினரால் மகாராஷ்டிரா மீனவர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து மீனவர் படுகொலைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் அருகே இந்திய கடற்பரப்பில் கடந்த 6-ந் தேதி 7 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மகாராஷ்டிரா, டையூ உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பாகிஸ்தான் கடற்படையினர் 2 படகுகளில் வந்தனர். பின்னர் திடீரென மகாராஷ்டிரா, டையூ மீனவர்கள் மீது கண் மூடித்தனமாக பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மகாராஷ்டிரா மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். டையூ மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

கொலை வழக்கும் கண்டனமும்
இதனையடுத்து பாகிஸ்தானின் 10 கடற்படை வீரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேரில் வரவழைத்து மீனவர் படுகொலைக்கு மத்திய அரசு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. மீனவர் படுகொலைக்காக பாகிஸ்தான் கடற்படையினர் மீது கொலை வழக்கு, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வரவழைத்து கண்டனம் என மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகளை மீனவர்கள் பாராட்டி வருகின்றனர்.

800 தமிழர்கள் படுகொலை
இருப்பினும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 800க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில்தான் மீன்பிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்தும் வேதாரண்யத்தில் இருந்தும் கூப்பிடு தொலைவில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்தாலே இலங்கை கடற்படை அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.

இலங்கைக்கு கண்டனம் எப்போது?
காக்கை குருவிகளை சுட்டுக் கொல்வது போல தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது; ஆனால் தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக மத்திய அரசு இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறது. இலங்கை கடற்படைக்கு எதிராக துரும்பைக் கூட மத்திய அரசு கிள்ளிப் போட்டது இல்லை. இதுதான் தமிழக மக்களின் பெரும் அதிருப்திக்கு காரணமாக இருந்து வருகிறது.

தொடரும் ராணுவ உதவி
இன்னொருபக்கம், தமிழக மீனவர்களை படுகொலை செய்கிற இலங்கை கடற்படைக்கு இந்தியாவிலேயே பயிற்சி கொடுப்பது, தமிழர்களை படுகொலை செய்கிற இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவிகள் செய்வது, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க நிதி உதவி செய்வது என்கிற மத்திய அரசின் போக்கும் தமிழகத்தின் அதிருப்திக்கு காரணமாக இருக்கிறது. ஒரு மீனவர் படுகொலைக்காக மத்திய அரசு இத்தனை வேகம் காட்டும் போது 800 தமிழக மீனவர் படுகொலைக்கு எத்தனை கோபத்தை காட்டியிருக்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications