"விரைவாக மீண்டுவிட்டோம்.." கொரோனாவுக்கு முந்தைய நிலையை ஏற்கனவே அடைந்துவிட்டோம்- பொருளாதார ஆய்வறிக்கை
கொரோனா தொற்று சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்றம் தொடங்கியது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது.
சரியும் வளர்ச்சி! 2024ல் ஜிடிபி 6-6.8% ஆக இருக்கும்! நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை
பட்ஜெட்
இந்த ஆண்டு மட்டும் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இந்தாண்டு பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதாவது தற்போதுள்ள மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட்டாக இது உள்ளதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நிர்மலா சீதாராமன்
நாளைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24இல் 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22இல் இது 8.7%ஆகவும் அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இது 7%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரம்
மேலும், உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் எக்ஸ்சேன்ஞ் ரேட் அடிப்படையில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்தும் மீண்டுவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த இழப்பைக் கிட்டத்தட்ட மீட்டுவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. பெருந்தொற்று மற்றும் உக்ரைன் விவகாரம் காரணமாக இழந்த பொருளாதாரம் மீட்கப்பட்டுள்ளதாகவும் நிறுத்தப்பட்ட வளர்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பல உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பாக மீண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோவுக்கு முந்தைய நிலை
மேலும், 2022இல் நமது நாட்டின் பொருளாதாரம் என்பது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பிலும் கூட இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் வரும் ஆண்டின் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.