இந்தியாவில் திடீரென் அதிகரித்த ஒருநாள் கொரோனா பாதிப்பு- 166 பேருக்கு தொற்று உறுதி-கேரளாவில் அதிகம்!
டெல்லி: இந்தியாவில் திடீரென ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கேரளாவில் அதிக பாதிப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதாக ஊடக ஏஜென்சிகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
உலக நாடுகளில் 2019-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி 2 ஆண்டுகள் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,91,15,910 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 69,49,282 ஆகவும் இருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 66,90,82,841 எனவும் கூறப்பட்டது.

நமது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,50,02,561 ஆகவும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,44,68,854 ஆகவும் இருந்தது. கொரோனாவால் இந்தியாவில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 5,33,306.
உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பேராபத்து பெருமளவு விலகியது. நமது நாட்டில் இதுவரை 220,67,78,453 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சொற்ப அளவில்தான் இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது வெறும் 24 ஆக இருந்தது. தற்போது மழை வெள்ளம், குளிர்காலம் என்பதால் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதுவும் ஒரு நாள் பாதிப்பு சராசரியாக 100 என்ற அளவில்தான் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இது சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கையின்படி இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் பதிவான ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 165. இதில் கேரளாவில்தான் கூடுதலான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் என்பவை 895 ஆகும். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை விடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications