இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பில் உச்சம்.. ஒரே நாளில் 62,714 பேருக்கு பாஸிடிவ்!
டெல்லி: இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 60,000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 312 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,61,552 -ஐ தொட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆட்டம் போடும் கொரோனா
நாடு முழுவதும் சில காலம் மாதங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்த கொரோனா தற்போது மீண்டும் தனது பேயாட்டத்தை தொடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் அடங்கி இருந்த இப்போது 60,000-ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் 80% சதவீத பாதிப்புகள் உள்ளன.

தடுப்பு வழிமுறைகள் தீவிரம்
இது போதாதென்று உருமாறிய கொரோனா வேறு இந்தியாவில் அச்சறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதியில் தடுப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறி இருக்கிறது.

5 மாதங்களுக்கு பிறகு அதிக பாதிப்பு
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்கள் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. தமிழகத்திலும் கூடுதல் கொரோனா பரிசோதனை முகாம்கள், மாஸ்க் உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 60,000-ஐ கடந்துள்ளது.

312 பேர் உயிரிழந்தனர்
இந்த ஆண்டின் அதிகபட்ச உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு 1,19,71,624 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 312 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,61,552 -ஐ தொட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 28,739 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,13,23762 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

6,02,69,782 பேருக்கு தடுப்பூசி
4,86,310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 94.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 6,02,69,782 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications