இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா.. ஒரு வாரத்தில் 2.38 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2.38 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நாடு முழுவதும் உள்ள மொத்த கேஸ்களில் 21 சதவீதம் இந்த ஒரு வாரத்தில் வந்தவை ஆகும்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நளில் 40363 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,17,061 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் இந்தியாவில் 673 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27,460 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 22 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் 1.2லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு. ஜூன் 29 முதல் ஜூலை 5 வரையிலான காலக்கட்டத்தில் 1.5லட்சமாக உயர்ந்தது. ஜூலை 6 முதல் 12 வரையிலான காலக்கட்டத்தில் 1.81லட்சமாக அதிகரித்தது. ஆனால் ஜூலை 13 முதல் 19 வரையிலான கடந்த வாரக் காலக்கட்டத்தில் 2.4 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 9,518 கேஸ்கள் பதிவாகின. அதற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான கேஸ்கள் ஆந்திராவிலிருந்து பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஒரு நாளில் 5,041 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட மாநிலமாக ஆந்திரா மாறியுள்ளது,
சனிக்கிழமையன்று 3,963 நோய்த்தொற்றுகள் பதிவாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாயிரத்தை ஆந்திரா கடந்துள்ளது. தமிழகம் (4,979 புதிய தொற்றுகள் ), மேற்கு வங்காளம் (2,278), உத்தரப்பிரதேசம் (2,250), குஜராத் (965), ராஜஸ்தான் (934), மத்தியப் பிரதேசம் (837), கேரளா (821), உத்தரகண்ட் (239). மாநிலங்களில் அடுத்தடுத்து பாதிப்பை சந்தித்துள்ளன.












Click it and Unblock the Notifications