இந்தியாவின் சரித்திரம்.... முப்படைகளின் முதலாவது தலைமை தளபதியாக திகழ்ந்த பிபின் ராவத்!
டெல்லி: இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் முறையாக முப்படைகளின் தலைமை தளபதியாக 2019-ல் பதவி ஏற்றவர் பிபின் ராவத்.
Recommended Video
தமிழகத்தின் நீலகிரியில் இன்று விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக முப்படைகளின் தலைமை பதவியில் நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் பிபின் ராவத். இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர்.

கார்கில் யுத்த காலம் முதல்
1999-ம் ஆண்டு கார்கில் யுத்த காலத்தில்தான் முப்படைகளுக்குமான தலைமை தளபதி குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.

2019-ல் முதலாவது நியமனம்
2001-ம் ஆண்டு அமைச்சரவை குழு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்தது. பின்னர் நரேஷ் சந்திரா கமிட்டி, லெப்.ஜெனரல் ஷெகாத்கர் கமிட்டி ஆகியவையும் முப்படைகளுக்குமான தலைமை தளபதி குறித்து பரிந்துரைகள் வழங்கியது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி, முப்படைகளுக்குமான தலைமை தளபதி நியமிக்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் 2019-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி இப்பதவி அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியால் உருவாக்கப்பட்டது. அப்போது ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற இருந்தார் பிபின் ராவத். இந்த நிலையில் நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார் பிபின் ராவத்.

என்ன பணி?
முப்படைகளுக்கான தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருந்தாலும் ராணுவத்தினருக்கு அவரால் உத்தரவு பிறப்பிக்க இயலாது; ஆனால் முப்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளை தெரிவித்து அவற்றை செயல்படுத்துகிற ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அதேபோல் ஆயுத கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை முப்படைகளுக்குமான தலைமை தளபதி பிபின் ராவத் மேற்கொண்டு வந்தார். நமது ராணுவத்தில் முதல் முறையாக 2019-ம் ஆண்டுதான் இப்பதவி உருவாக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து
கடந்த 2 ஆண்டுகளாக முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருந்து வந்தார் பிபின் ராவத். தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு டெல்லியில் இருந்து மனைவி மற்றும் அதிகாரிகளுடன் விமானப் படை ஹெலிகாப்டரில் பயணித்தார் பிபின் ராவத். குன்னூர் அருகே இன்று முற்பகல் 11.30 மணிக்கு பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications