"ஆப்ரேஷன் கங்கா"வில் C-17 ராணுவ விமானம்! பிரதமர் மோடி முக்கிய உத்தரவு! ஏன் முக்கியம்.. பரபர தகவல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை ரஷ்யா போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து இந்த முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது.
முதலில் வான்வழித் தாக்குதல், அதன் பின்னர் பீரங்கி, டாங்கிகளை பயன்படுத்தித் தாக்குதல் என முழு வீச்சில் போரைத் தொடங்கியுள்ளது ரஷ்யா. அதிபர் புதினின் இந்தத் திடீர் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆப்ரேஷன் கங்கா
இந்த போர் காரணமாக உக்ரைன் வான்வழி மூடப்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதையடுத்து மாற்று வழிகளைப் பயன்படுத்தி, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்குத் தரைவழியாக மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆப்ரேஷன கங்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்கள்
இதனிடையே ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைப் பகுதிகளில் உணவு, குடிநீர் கூட இல்லாத சூழலில் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் அங்கு இருக்கும் உக்ரைன் காவலர்கள் மாணவர்களைத் தாக்குவதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் உள்ள மாணவ- மாணவிகளின் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர்.

பிரதமர் மோடி
உக்ரைனில் உள்ள மாணவர்களைப் பத்திரமாக இந்தியா அழைத்து வருவது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. கடந்த 48 மணி நேரத்தில் 4ஆவது முறையாகப் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். மாணவர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளைப் பிரதமர் மோடி நேரடியாகக் கண்காணித்து வருவதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முக்கிய உத்தரவு
இந்நிலையில் மாணவர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளைத் துரிதப்படுத்தும் விதமாக இந்திய விமானப் படை விமானங்களைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான C-17 விமானம் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களே மாணவர்களைத் தாயகம் அழைத்து வரப் பயன்படும் நிலையில், விமானப் படை விமானங்கள் மூலம் ஒரே நேரத்தில் அதிகளவிலான மாணவர்களைத் தாயகம் அழைத்து வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த C-17 விமானம் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 400 மாணவர்களைத் தாயகம் அழைத்து வர முடியும்.












Click it and Unblock the Notifications