சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியா வருவதில்லை.. ஏன் தெரியுமா? அமெரிக்க தூதர் ஆதங்கம்
டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இந்தியா தங்களது வரி கட்டணத்தை குறைக்க வேண்டும். பல நிறுவனங்கள் இந்தியா வருவதற்கு பயப்படுவதே இந்த கட்டணத்தால் தான். அதன் காரணமாக தான் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் வெளியேறினாலும் அவை இந்தியா வருவதில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்கா நாட்டின் தூதராக உள்ள எரிக் கார்செட்டி ஒரு ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அது சர்வதேசளவு பேசு பொருளாகியுள்ளது. அந்தப் பேட்டியில் எரிக் கார்செட்டி, "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க - இந்தியா வர்த்தகம் குறித்து விமர்சித்துள்ளார். அதிபர் டிரம்ப் கூறுவது சில விஷயங்களில் உண்மை தான்.

இதுதொடர்பான பல ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டியுள்ளது. வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை முழுவதுமாக நிவர்த்தி செய்வோம் என்று வாக்குறுதியுடன் நிர்வாகம் செய்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் தான் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். எல்லாவற்றுக்கும் சீனாவை சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த வேண்டும்.
அதற்கு சுகாதாரம், மருந்துகள், எலக்ட்ரானிஸ் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி உலகளவில் மாற்று ஏற்பாடுகள் தேவை. இந்தியா அதற்கு சிறந்த மாற்றாக இருக்கும். ஆனால், இந்தியா தங்களின் கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது உலக நாடுகளின் பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றன.
ஆனால் அந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதில்லை. இங்குள்ள வரி கட்டணம் அதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே இந்தியா தங்களின் வரி விகிதங்களை மேலும் குறைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். வர்த்தகத்தில் பாதுகாப்பு, வரி, திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பு டிரம்ப் ஒரு நிகழ்ச்சியில், "அமெரிக்காவை உலகளவு செல்வாக்கு மிக்க வளமான நாடாக மாற்றுவதை முதன்மை திட்டமாக வைத்துள்ளேன். பொதுவாக நாம் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த முறையை நாங்கள் மிகவும் ஆழமாக நம்புகிறோம். வேன் முதல் சிறிய டிரக் வரை எதற்கும் அதிக கட்டணம் நிர்ணயிப்பதில்லை.
சீனா 200 சதவீதம் அதிகம் கட்டணம் நிர்ணயிக்கிறது. அதேபோல பிரேசில் நாடும் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இவர்களை எல்லாம் விட அதிகமாக இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறது. என்று நேரடியாக விமர்சனம் செய்திருந்தார். இது அப்போதே பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது அதே கருத்தை அமெரிக்காவின் தூதர் கூறியுள்ளார்.
என்னதான் டிரம்ப் இந்தியாவின் கட்டணத்தின் மீது விமர்சனம் வைத்தாலும், அவர் பிரதமர் நரேந்திர மோடியை மிகச்சிறந்த தலைவர் என்று பாராட்ட தவறவில்லை. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், கட்டணத்தைப் பற்றி அரசாங்கம் பெரிதாக கவலை கொள்ளவில்லை. சீனாவில் அதிக கட்டணம் என்றால் அது இந்தியாவுக்கு தான் உதவும்.
அனைவரும் ஒரே மாதிரியான கட்டணம் என்றால் கிட்டத்தட்ட ஒரே கப்பலில் பயணிப்பதை போன்றதுதான். இப்போதும் நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். உலகளவில் நிறுவனங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக உள்ளோம். அதனால் தான் டிரம்புக்கு கட்டணத்தில் மாறுபட்ட கருத்து நிலவினாலும், அவரும் இந்தியாவில் தொழிலை விரிவுபடுத்த ஆசைப்படுகிறார். " என்றார்.












Click it and Unblock the Notifications