இந்தியா -இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி... திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது..!
டெல்லி: இந்தியா - இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி திரிகோணமலையில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இரு நாட்டு கடற்படையும் 'ஸ்லிநெக்ஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டுப்பயிற்சியில் நீர் மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட ஐ.என்.எஸ். கமோர்தா, ஐ.என்.எஸ். கில்டன் என இரண்டு போர்க்கப்பல்கள் இந்தியா சார்பில் கலந்துகொள்கின்றன.

இதுமட்டுமல்லாமல் டோர்னியர் விமானம், சேத்தக் ஹெலிகாப்டர்கள், ஆகியவையும் இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இலங்கை கடற்படை தரப்பில் இருந்து எஸ்.எல்.என்.சயூரா என்ற ரோந்து கப்பல் மற்றும் கஜபாகு என்ற பயிற்சிக் கப்பல் கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா மற்றும் இலங்கை கடற்படையினர் இடையே பரஸ்பர புரிதலை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் 'ஸ்லிநெக்ஸ்' என்ற பெயரில் இரு நாட்டு கடற்படையினர் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது. இன்று திங்கள்கிழமை தொடங்கும் இந்தப் பயிற்சி வரும் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.

போர்க்கப்பல்கள் மற்றும் இலகு ரக விமானங்களின் திறனை கூட்டுப்பயிற்சி மூலம் வெளிப்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது. இந்தாண்டு இலங்கையின் திரிகோணமலையில் கூட்டுப்பயிற்சி நடைபெறும் நிலையில், கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் இரு நாட்டு கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி நடைபெற்றது.
இந்தியா -இலங்கை கடற்படை இடையே எத்தனை கூட்டுப்பயிற்சிகள் நடத்தப்பட்டாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை முழுமையாக இன்னும் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications